search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவையில் குடிநீர் வினியோகம் தொடர்பாக நகராட்சி நிர்வாக முதன்மை செயலாளர் வீடு, வீடாக சென்று ஆய்வு
    X

    கோவையில் குடிநீர் வினியோகம் தொடர்பாக நகராட்சி நிர்வாக முதன்மை செயலாளர் வீடு, வீடாக சென்று ஆய்வு

    கோவையில் குடிநீர் வினியோகம் தொடர்பாக நகராட்சி நிர்வாக முதன்மை செயலாளர் வீடு, வீடாக சென்று ஆய்வு செய்தார்.

    கோவை:

    தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலாளர் ஹர்மந்தர் சிங், கோவை மாவட்ட கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

    நேற்று கோவை வந்த ஹர்மந்தர்சிங், சூலூர் ஊராட்சி ஒன்றியம் சின்னியம்பாளையம், அரசூர் மற்றும் கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிக்கு சென்று உள்ளாட்சித் துறை மூலம் அமைக்கப்பட்டு இருக்கும் தெருவிளக்குகள் மற்றும் குடிநீர் வினியோகம் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும் அவர் தொட்டிபாளையம் உள்ளிட்ட பகுதியில் வீடு வீடாக சென்று, முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறதா? தெருவிளக்குகள் ஒளிர்கிறதா? கூடுதலாக எங்கும் தெருவிளக்குகள் அமைக்க வேண்டுமா? என்று பொதுமக்களிடம் கேட்டார். பின்னர் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை முதன்மை செயலாளர் ஹர்மந்தர்சிங் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கோவை மாவட்டத்தின், மாநகராட்சி, நகராட்சிகள், ஊராட்சிகள், பேரூராட்சி பகுதிகளில் குடிநீர், தெரு விளக்கு, சாலை வசதி, கழிப்பறை வசதிகளை 90 சதவீதம் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளது. குறிப்பாக தெருவிளக்கு பழுதுகளை 48 மணி நேரத்திற்குள் சரிசெய்ய உத்தரவிட்டுள்ளது. மேலும், அடிப்படை வசதிகளை ஒவ்வொரு நாளும் ஆய்வு செய்து சனிக்கிழமைகளில் அதுதொடர்பான கூட்டம் நடத்தி ஞாயிறு தோறும் அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளது.

    டிசம்பர் மாதத்திற்குள் அனைத்து பகுதிகளிலும் அடிப்படை வசதிகளை முழுமையாக பூர்த்தி செய்து தன்னிறைவு பெறச்செய்ய அரசு தீவிரமாக ஈடுபட்டு உள்ளது. அதன்படி கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராமங்கள் வாரியாக சாலை வசதி, தெருவிளக்கு, குடிநீர், தனிநபர் கழிப்பறை வசதிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக மாவட்டத்தில் கிராமப்பகுதிக்கு ஊராட்சி செயலாளர்கள் நாள்தோறும் மாலை நேரங்களில் நேரில் சென்று கிராமங்கள்தோறும் மக்களை சந்தித்து இந்த அடிப்படைத் தேவைகளை கேட்டறிந்து அவற்றை உடனடியாக அலுவலருக்கு உடனடியாக தெரிவித்து வருகின்றனர்.

    இப்பணிகளை அவ்வப்போது, மாவட்ட கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் உள்ளிட்ட பல்வேறு அலுவலர்களும் திடீர் கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

    கிராமங்களில் தெரு விளக்கு பழுது தொடர்பாக புகார் தெரிவித்தால் 48 மணி நேரத்திற்குள் சரிசெய்து தெருவிளக்கினை எரிய செய்ய வேண்டும் என்று அந்தந்த பகுதி வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஆணையாளர்கள், ஊராட்சி செயலாளர்களுக்கு உத்தர விடப்பட்டுள்ளது. குடிநீர், இணைப்பு, சாலை வசதி, கழிப்பறை, புதிய தெரு விளக்கு வசதி கோரி மக்கள் மனு கொடுத்தால் உடனுக்குடன் நிறைவேற்ற தேவையான நிதி அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின் போது, கோவை கலெக்டர் ஹரிகரன், மாநகராட்சி தனி அதிகாரி விஜயகார்த்திகேயன், துணை ஆணையாளர் காந்திமதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ரூபன்சங்கர்ராஜ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×