search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    7 பேர் விடுதலை விவகாரத்தில் அமைச்சரவை பரிந்துரையை கவர்னர் ஏற்பாரா? - சட்ட நிபுணர்கள் மாறுபட்ட கருத்து
    X

    7 பேர் விடுதலை விவகாரத்தில் அமைச்சரவை பரிந்துரையை கவர்னர் ஏற்பாரா? - சட்ட நிபுணர்கள் மாறுபட்ட கருத்து

    ராஜீவ் கொலை கைதிகளை விடுதலை செய்வது தொடர்பாக அமைச்சரவை அளிக்கும் பரிந்துரையை கவர்னர் ஏற்பாரா? என்பது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. #RajivGandhimurdercase #TNGovernor #BanwarilalPurohit

    சென்னை:

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991-ம் ஆண்டு மே மாதம் 21-ந்தேதி ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டால் படுகொலை செய்யப்பட்டார்.

    அந்த வழக்கில் முருகன், சாந்தன், நளினி உள்பட 20-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் பூந்தமல்லி தடா கோர்ட்டு மரண தண்டனை விதித்தது.

    இதை எதிர்த்து அனைவரும் சுப்ரீம்கோர்ட்டில் அப்பீல் செய்தனர். அந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு முருகன், நளினி, பேரறிவாளன், சாந்தன் ஆகிய 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்தது.

    ராபட்பெயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 3 பேரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றியது. மற்றவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

    இந்த நிலையில் நளினியின் தூக்கு தண்டனை கடந்த 2000-ம் ஆண்டு ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. பேரறிவாளன், சாந்தன், முருகன் மூவரும் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினார்கள். அந்த மனு மீது முடிவு எடுக்கப்படாததால் தங்களை விடுவிக்க வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரது தூக்கு தண்டனையையும் ஆயுள் தண்டனையாக குறைத்தது. என்றாலும் தங்களை விடுவிக்க வேண்டும் என்று மூவரும் சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு பேரறிவாளன், சாந்தன், முருகன் மூவரையும் விடுதலை செய்வது பற்றி மாநில அரசே தீர்மானிக்கலாம் என்று அதிரடி தீர்ப்பை வெளியிட்டது. இதையடுத்து அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா அமைச்சரவை கூட்டத்தை கூட்டி 3 பேரையும் விடுதலை செய்யலாம் என்று முடிவு செய்தார்.

     


     

    அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கு மத்திய அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதோடு ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரை விடுதலை செய்யக்கூடாது என்று மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கும் தொடர்ந்தது.

    கடந்த 4 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில் நேற்று முன்தினம் சுப்ரீம் கோர்ட்டு இறுதி தீர்ப்பு வழங்கியது. நீதிபதிகள் ரஞ்சன்கோகாய், நவீன் சின்கா, ஜோசப் ஆகியோர் கொண்ட பெஞ்ச் இது தொடர்பாக வெளியிட்ட உத்தரவில், “ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு, கவர்னருக்கு பரிந்துரை செய்யலாம். அந்த பரிந்துரையை பரிசீலித்து முடிவு எடுக்கும் அதிகாரம் கவர்னருக்கு உள்ளது” என்று கூறப்பட்டது.

    இதையடுத்து ராஜீவ் கொலை கைதிகள் விடுதலையாக வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது. தமிழக அரசு இதற்காக நாளை அமைச்சரவை கூட்டத்தை கூட்ட உள்ளது. அந்த கூட்டத் தில் 7 பேரை விடுவிக்கும் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.

    நாளை மாலை 4 மணிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. அதில் எடுக்கப்படும் முடிவு திங்கட்கிழமை கவர்னருக்கு பரிந்துரையாக அனுப்பி வைக்கப்படும்.

    அந்த பரிந்துரையின் மீது கவர்னர் பன்வாரிலால் புரோகித் எத்தகைய முடிவு எடுப்பார் என்பது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ராஜீவ் கொலை கைதிகள் 7 பேர் விடுதலை ஆவது அவர் எடுக்க போகும் முடிவில்தான் இருக்கிறது என்பதால் அவரது முடிவை தெரிந்து கொள்ள ஆர்வம் அதிகரித்து உள்ளது.

    கவர்னர் தன்னிச்சையாக முடிவு எடுப்பாரா? அவருக்கு அந்த அதிகாரம் உள்ளதா? அல்லது அவர் மத்திய அரசிடம் கருத்து கேட்டு விட்டு முடிவு எடுப்பாரா? அந்த முடிவு எப்படி இருக் கும்? என்றெல்லாம் கேள்விக் குறிகள் எழுந்துள்ளன.

    கவர்னர் பன்வாரிலால் தனது கைக்கு அமைச்சரவையின் பரிந்துரை கிடைத்ததும் இதுபற்றி சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்துவார் என்று தெரிகிறது. அதன் பிறகு அவர் தனது முடிவை தெரிவிக்க எத்தனை நாட்கள் எடுத்துக் கொள்வார் எனத் தெரியவில்லை.

     


     

    ஆனால் இந்திய அரசியலமைப்பு சட்டம் 161-வது பிரிவின்படி கவர்னருக்கு இந்த விவகாரத்தில் உடனடியாக முடிவு எடுக்க அதிகாரம் உள்ளது. அதாவது 7 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட கவர்னருக்கு முழு அதிகாரம் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

    சட்டத்துக்கு எதிரான வகையில் குற்றம் இழைக்கும் எந்த ஒரு நபர்களின் தண்டனையையும் ரத்து செய்ய கவர்னருக்கு முழு அதிகாரம் இருப்பதாக அந்த சட்ட பிரிவில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த அதிகாரத்தை பன்வாரிலால் எப்படி கையாளப் போகிறார் என்பதில்தான் எதிர்பார்ப்பு உள்ளது.

    7 பேர் விடுதலையை பொறுத்தவரை மத்திய அரசிடம் எந்தவித கருத்தையும் கவர்னர் கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்று பெரும்பாலான சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மூத்த வக்கீல் வில்சன் இது தொடர்பாக கூறுகையில், “7 பேர் விடுதலைக்கு தமிழக அரசு அமைச்சரவையில் தீர்மானம் கொண்டு வந்து பரிந்துரை செய்தால் கவர்னர் அதை சட்டப்படியாக ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். அந்த பரிந்துரையை நிராகரிக்க சட்டத்தில் இடமில்லை” என்றார்.

    மற்றொரு மூத்த வக்கீல் ஆர்யமாசுந்தரம் கூறியதாவது:-

    அரசியலமைப்பு சட்டப் பிரிவு 161(1)-ன்படி கவர்னருக்கு என்று பிரத்யேகமாக அதிகாரங்கள் உள்ளன. என்றாலும் கவர்னர் 7 பேர் விடுதலை குறித்து மத்திய அரசிடம் ஆலோசனை நடத்தலாம். கவர்னர் ஆலோசனை நடத்தக்கூடாது என்று எந்த சட்டமும் கிடையாது.

    எனவே 7 பேர் விடுதலை விவகாரம் மீண்டும் மறைமுகமாக மத்திய அரசின் கைக்கே செல்ல வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மூத்த வக்கீல் சுதா ராமலிங்கம் கூறியதாவது:-

    தமிழக அமைச்சரவை பரிந்துரை செய்வதை கவர்னர் ஏற்றே ஆக வேண்டும். வேண்டுமானால் அந்த பரிந்துரையில் திருத் தங்கள் செய்ய கவர்னர் சொல்லலாம். ஆனால் திருத்தங்களை சரி செய்த பிறகு பரிந்துரையை கவர்னர் ஏற்பதே இறுதியானது.

    அமைச்சரவை பரிந்துரையை கவர்னர் கண்டிப்பாக நிராகரிக்க முடியாது. இந்த வி‌ஷயத்தில் இறுதி அதிகாரம் கவர்னருக்கு உள்ளதா? அல்லது அரசுக்கு உள்ளதா? என்று கேட்டால் மக்களால் தேர்ந் தெடுக்கப்படும் அரசுக்கு தான் உள்ளது என்று சட்ட உட்பிரிவுகள் கூறுகின்றன. எனவே அரசு பரிந்துரையை கவர்னர் ஏற்று நிறை வேற்றியே ஆக வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சட்ட நிபுணர்கள் மாறுபட்ட கருத்துகளை கூறி இருப்பதால் கவர்னரின் முடிவு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நீடிக்கிறது. #RajivGandhimurdercase #TNGovernor #BanwarilalPurohit

    Next Story
    ×