search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலூர் மண்டல நகர் அமைப்பு அலுவலகத்தில் சோதனை - லஞ்சம் வாங்குவதற்கு தனியாக அலுவலகம் நடத்திய அதிகாரி
    X

    வேலூர் மண்டல நகர் அமைப்பு அலுவலகத்தில் சோதனை - லஞ்சம் வாங்குவதற்கு தனியாக அலுவலகம் நடத்திய அதிகாரி

    வேலூர் மண்டல நகர் ஊரமைப்பு துணை இயக்குனர் சுப்பிரமணியன் லஞ்சம் வாங்குவதற்காக லஞ்சப் பணத்தில் ஆட்களை நியமித்து தனியாக அலுவலகம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Bribe

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே பழைய முருகன் தியேட்டர் பகுதியில் வேலூர் மண்டல நகர் ஊரமைப்பு துணை இயக்குனர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு துணை இயக்குனராக சுப்பிரமணியன் கடந்த 1½ ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.

    இந்த அலுவலகத்தில் வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவுகளுக்கு அங்கீகாரம் அளித்தல், தொழிற்சாலைகள், நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் போன்றவற்றிற்கு கட்டிட வரைபட ஒப்புதல் வழங்குதல் உள்பட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    வழக்கம்போல் நேற்று துணை இயக்குனர் சுப்பிரமணியன் மற்றும் ஊழியர்கள் அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்தனர்.

    இந்த அலுவலகத்தில் முறையற்ற பணப்பரிமாற்றம் நடைபெற்று வருவதாக வேலூர் லஞ்ச ஒழிப்பு துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் வேலூர் லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணக்குமார், இன்ஸ்பெக்டர்கள் விஜய், விஜயலட்சுமி உள்பட போலீசார் நேற்று இரவு 7 மணி அளவில் திடீரென அலுவலகத்திற்குள் நுழைந்து சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

     

    வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள மண்டல நகர் ஊரமைப்பு துணை இயக்குனர் அலுவலகம்.

    மேலும் அலுவலகத்திற்குள் இருந்து ஊழியர்கள் வெளியே யாரும் செல்லாத வகையிலும், வெளியே இருந்து யாரும் உள்ளே செல்லாத வகையிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    போலீசாரின் விசாரணையில் சுப்பிரமணியன் வேலூர் வள்ளலார் டபுள்ரோடு விவேகானந்தர் முதல் தெருவில் வாடகைக்கு ஒரு வீடு எடுத்து அலுவலக பணிகளை மேற்கொண்டு வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவரை அந்த வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.

    அந்த வீட்டில் உள்ள அறைகள் நகரமைப்பு அலுவலகம் போலவே அமைக்கப்பட்டிருந்தது. அரசு அலுவலகத்தில் உள்ள டேபிள், சேர்கள் அங்கே போடப்பட்டிருந்தன.

    மேலும் நகர் அமைப்பு அலுவலகத்தில் உள்ள அனைத்து பதிவேடுகள் ஆவணங்கள் அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. சுப்பிரமணியன் லஞ்சம் வாங்குவதற்காகவும் முறைகேடுகள் செய்வதற்காகவும், மிகவும் சாமர்த்தியமாக தனியாக அலுவலகம் நடத்தியுள்ளார்.

    ரூ.8 ஆயிரம் மாத வாடகைக்கு இந்த வீட்டை எடுத்துள்ளார். அரசு அலுவலகம் போல உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள ரூ4 லட்சம் வரை செலவு செய்துள்ளார்.

    பிறகு அரசு அலுவலகத்திற்கு புதியதாக வந்த டேபிள், சேர்களை இங்கு போட்டுள்ளார். நகர் ஊரமைப்பு அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரியை பணிக்கு அமர்த்தி அவருக்கு கீழ் 37 பேரை வேலையில் சேர்த்துள்ளார். இவர்கள் மூலம் அலுவலகத்தில் நடக்க வேண்டிய அனைத்து பணிகளும் இங்கே நடந்துள்ளது. 38 ஊழியர்கள் தனியாக லேப்டாப் கொண்டு வந்து வேலை செய்து விட்டு வீட்டுக்கு எடுத்து சென்றுள்ளனர்.

     

    வள்ளலாரில் சுப்பிரமணியன் வாடகைக்கு எடுத்து அலுவலகம் நடத்திய வீட்டை படத்தில் காணலாம்.

    ஓய்வு பெற்ற அரசு ஊழியருக்கு மாதம் ரூ.20 ஆயிரம் மற்ற 37 ஊழியர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் என லஞ்ச பணத்தில் மாதம் ரூ.3 லட்சத்து 90 ஆயிரம் கொடுத்துள்ளார். மேலும் போனஸ் உள்ளிட்ட சலுகைகளும் வழங்கியதாக தெரிகிறது.

    இந்த பணிகள் எல்லாம் சுப்பிரமணியன் பணியில் சேர்ந்த 1½ ஆண்டுகளாக நடந்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் ஒரு சில மாதங்களாகத்தான் தனியாக அலுவலகம் நடத்தி வந்ததாக அவர் கூறியுள்ளார்.

    இதனையடுத்து வாடகை வீட்டில் நடத்தப்பட்ட அலுவலகத்தில் இருந்து ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். மீண்டும் சுப்பிரமணியனை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள மண்டல நகர் ஊரமைப்பு அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

    அங்கு தொடர்ந்து சோதனையும் நடத்தப்பட்டது. அங்கிருந்து கணக்கில் வராத 3 லட்சத்து 28 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர். நேற்று இரவு 7 மணிக்கு தொடங்கிய சோதனை 8 மணி நேரத்திற்கு பிறகு இன்று அதிகாலை 3 மணிக்கு நிறைவு பெற்றது.

    லஞ்சம் வாங்கவும், முறைகேடுகள் செய்யவும் தனியாக அலுவலகம் நடத்திய சுப்பிரமணியன் கோடி கணக்கில் லஞ்சம் வாங்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

    இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் சுப்பிரமணியன் தனியாக வேலைக்கு அமத்திய ஓய்வு பெற்ற அரசு ஊழியர் உள்பட 38 பேர் குறித்த விவரங்களை சேகரித்துள்ளனர். அவர் களிடமும் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

    இந்த சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது. #Bribe

    Next Story
    ×