search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு: ரிக் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்
    X

    டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு: ரிக் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்

    டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று ரிக் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் ரூ.1 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டு இருப்பதாக சங்க நிர்வாகிகள் கூறினர்.
    நாமக்கல்: 

    நாமக்கல் மாவட்டத்தில் திருச்செங்கோடு, வேலகவுண்டம்பட்டி, கந்தம்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 3 ஆயிரம் ரிக் லாரிகள் உள்ளன. இவற்றில் 2 ஆயிரம் லாரிகள் வடமாநிலங்களில் இயக்கப்பட்டு, ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியில் ஈடுபடும் ரிக் லாரிகளுக்கு அதிக அளவில் டீசல் தேவைப்படும். சமீப காலமாக டீசல் விலை ‘கிடுகிடு’ என உயர்ந்து வருவதால், ரிக் லாரி உரிமையாளர்கள் தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதன் விலையை குறைக்க வலியுறுத்தியும் 2 நாட்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட நாமக்கல்லில் நடந்த தாலுகா ரிக் லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்த போராட்டத்துக்கு திருச்செங்கோடு ரிக் லாரி உரிமையாளர்கள் சங்கமும் ஆதரவு தெரிவித்து இருந்தது. அதன்படி நேற்று நாமக்கல் மாவட்டத்தில் ரிக் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ரிக் லாரிகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு இருந்தன.

    இந்த போராட்டம் குறித்து நாமக்கல் தாலுகா ரிக் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் போராட்டக்குழு பொறுப்பாளர் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:-

    எங்களின் போராட்டம் காரணமாக தமிழகம் முழுவதும் சுமார் 500 ரிக் லாரிகள் நிறுத்தப்பட்டு உள்ளன. இதனால் ரிக் உரிமையாளர்களுக்கு சுமார் ரூ.1 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது.

    எங்களின் போராட்டம் இன்றும் (வெள்ளிக்கிழமை) நீடிக்கும். எங்களின் போராட்டத்துக்கு பிறகும் டீசல் விலை குறைக்கப்படவில்லை என்றால் ஆழ்துளை கிணறு அமைக்க வசூலிக்கும் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்து உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×