search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூத்துக்குடி வாலிபர் கொலை- முக்கிய குற்றவாளியை பிடிக்க தனிப்படை போலீஸ் தீவிரம்
    X

    தூத்துக்குடி வாலிபர் கொலை- முக்கிய குற்றவாளியை பிடிக்க தனிப்படை போலீஸ் தீவிரம்

    தூத்துக்குடி நடந்த கொடை விழாவில் வாலிபர் குத்திகொலை செய்யப்பட்டு கிடந்தார். இதில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியை பிடிக்க போலீசார் தேடி வருகிறார்கள்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி 3 சென்ட் பகுதியை சேர்ந்த பாலமுருகன் மகன் முத்து இருளப்பன் என்ற அஜித்குமார் (வயது 21) கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு ஊருக்கு வந்தார். சம்பவத்தன்று அவர் அந்த பகுதியில் நடந்த கோவில் கொடை விழாவிற்கு சென்று விட்டு, ராஜபாண்டிநகர் கெபி அருகே வந்து கொண்டு இருந்தார்.

    அப்போது அவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சங்கர், அவருடைய மகன் பாரதி (23), அவரின் நண்பர்கள் மோகன், நாகராஜ் ஆகியோருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் அஜித்குமார் குத்திக்கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து தூத்துக்குடி தென்பாகம் போலீசார் சங்கர், பாரதி உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த நிலையில் சங்கர், பாரதியின் நண்பர் நாகராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் அஜித்குமாரை வாளால் குத்தி விட்டு உயிருக்கு போராடி கொண்டு இருந்த அவரை, அருகே உள்ள ரெயில்வே தண்டவாளம் அருகே போட்டு விட்டு தப்பி சென்றது தெரியவந்தது.

    அஜித்குமார் கொலையில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான பாரதி மற்றும் நண்பர் மோகன் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் 2 பேரையும் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    Next Story
    ×