search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லாஸ்பேட்டையில் பியூட்டி பார்லரில் புகுந்து பொருட்கள் சூறை- பெண் ஊழியருக்கு கத்திகுத்து
    X

    லாஸ்பேட்டையில் பியூட்டி பார்லரில் புகுந்து பொருட்கள் சூறை- பெண் ஊழியருக்கு கத்திகுத்து

    லாஸ்பேட்டையில் மசாஜ் செய்ய மறுத்ததால் பியூட்டி பார்லரில் புகுந்து பொருட்களை சூறையாடிய ரவுடி கும்பல் பெண் ஊழியரை கத்தியால் குத்தியது.

    புதுச்சேரி:

    புதுவை லாஸ்பேட்டை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவராஜ் என்ற சிவக்குமார் (வயது 30). இவர் லாஸ்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் ஆண்- பெண்களுக்கான அழகு நிலையம் (பியூட்டி பார்லர்) நடத்தி வருகிறார்.

    நேற்று மாலை இந்த பியூட்டி பார்லருக்கு ஒருவர் போன் செய்து மசாஜ் செய்ய வேண்டும் என்று கேட்டார். அதற்கு கடையில் இருந்த பெண் ஊழியர் மசாஜ் செய்ய ஆண் ஊழியர் இல்லை என்று தெரிவித்தார்.

    சிறிது நேரத்தில் 4 பேர் கொண்ட கும்பல் பியூட்டி பார்லருக்கு வந்தது. அவர்கள் தங்களுக்கு மசாஜ் செய்ய வேண்டும் என்று பெண் ஊழியர்களை மிரட்டினர்.

    மேலும் பியூட்டி பார்லரில் இருந்த சி.சி.டி.வி. கேமரா உள்ளிட்ட பொருட்களை அடித்து உடைத்து சூறையாடினர். இதனை பார்த்ததும் பெண் ஊழியர்கள் அலறினர். ஆனால், ஆத்திரம் அடைந்த கும்பல் பெண் ஊழியர் ஒருவரை கத்தியால் குத்தியது.

    இதையடுத்து பெண் ஊழியர்கள் அனைவரும் அங்குள்ள அறைகளுக்குள் சென்று உள்பக்கமாக பூட்டி கொண்டனர். பின்னர் இதுகுறித்து லாஸ்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜாகீர் உசேன், தயாளன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் மாசிலாமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    பின்னர் ரகளையில் ஈடுபட்ட 4 பேர் கொண்ட கும்பலை மடக்கி பிடித்தனர். மேலும் கத்தி குத்தில் காயம் அடைந்த பெண் ஊழியரை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பிடிபட்ட 4 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கருவடிகுப்பத்தை சேர்ந்த கலையரசன், (34), பாலமுருகன் (29), சபரிநாதன் (28) மற்றும் அகிலன் (28) என்பது தெரியவந்தது.

    இதில் ரவுடியான கலையரசன் மீது கொலை முயற்சி, வெடிகுண்டு பதுக்கி வைத்திருந்தது மற்றும் பல்வேறு அடிதடி வழக்குகள் உள்ளது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து கலையரசன் உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்தனர். பியூட்டி பார்லரில் புகுந்து ரவுடி கும்பல் அட்டகாசம் செய்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×