search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீட் தேர்வால் கலைந்த மருத்துவ கனவு - என்ஜினீயரிங் கல்லூரி மாணவி தற்கொலை
    X

    நீட் தேர்வால் கலைந்த மருத்துவ கனவு - என்ஜினீயரிங் கல்லூரி மாணவி தற்கொலை

    நீட் தேர்வு காரணமாக மருத்துவ கனவு கலைந்ததால் என்ஜினீயரிங் கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    கோயம்பேடு:

    சேலையூர், மகாலட்சுமி நகர், புறநானூறு தெருவை சேர்ந்தவர் எட்வர்ட். தாம்பரம் கோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வருகிறார்.

    இவரது மகள் ஏஞ்சலின் சுருதி (வயது 19). செம்மஞ்சேரியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    நேற்று காலை அவர் கல்லூரிக்கு செல்லாமல் வீட்டிலேயே தனது அறையில் இருந்தார். நீண்ட நேரம் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் கதவை உடைத்து சென்றனர்.

    அப்போது அங்குள்ள படுக்கை அறையில் ஏஞ்சலின் சுருதி உயிருக்கு போராடியபடி கிடந்தார். அவரது தலையில் பாலித்தீன் கவர் மாட்டப்பட்டு, செல்போன் வயர் கட்டப்பட்டு இருந்தது. அவர் தற்கொலைக்கு முயன்று இருப்பது தெரிந்தது.

    இதனை கண்டு பதறிய பெற்றோர் ஏஞ்சலின் சுருதியை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஏஞ்சலின் சுருதி பரிதாபமாக இறந்தார். இதனை கண்டு பெற்றோர் கதறி துடித்தனர்.

    இது குறித்து சேலையூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது ‘நீட்’ தேர்வு எழுதியும் மருத்துவ சீட் கிடைக்காததால் ஏஞ்சலின் சுருதி தற்கொலை செய்து இருப்பது தெரிந்தது.

    ஏஞ்சலின் சுருதி கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த ‘நீட்’ தேர்வில் பங்கேற்றார். இதில் அவர் குறைவான மதிப்பெண் எடுத்ததாக தெரிகிறது. இதனால் அவருக்கு மருத்துவ சீட் கிடைக்கவில்லை. எனினும் மீண்டும் நீட் தேர்வு எழுதி மருத்துவம் படிக்க ஏஞ்சலின் சுருதி ஆசையாக இருந்தார்.

    ஆனால் அவரை என்ஜினீயரிங் படிப்பில் சேர பெற்றோர் வற்புறுத்தி செம்மஞ்சேரியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் சேர்த்தனர்.

    மருத்துவ படிப்பில் நாட்டம் இருந்த ஏஞ்சலின் சுருதிக்கு என்ஜினீயரிங் படிக்க ஆசையில்லை. இதனால் அவர் அடிக்கடி கல்லூரிக்கு செல்லாமல் இருந்தார்.

    மேலும் மருத்துவ படிப்பு குறித்து அவர் அடிக்கடி உடன்படிக்கும் மாணவிகள் மற்றும் பெற்றோரிடம் கூறி வந்தார். அவரை அவர்கள் சமாதானப்படுத்தி வந்தனர்.

    இந்த நிலையில் மனவேதனையில் இருந்த ஏஞ்சலின் சுருதி முகத்தில் பாலித்தீன் கவரை கட்டி தற்கொலை செய்து உள்ளார்.

    அவரது தற்கொலை முடிவுக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்றும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    நீட் தேர்வால் மருத்துவ படிப்புக்கு இடம் கிடைக்காததால் அரியலூரை சேர்ந்த மாணவி அனிதா ஏற்கனவே தற்கொலை செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. நீட் தேர்வுக்கு எதிராக அரசியல் தலைவர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்கள்.

    இதற்கிடையே நீட் தேர்வால் தற்போது ஏஞ்சலின் சுருதியும் தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×