search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரை சிறைத்துறை பெண் அதிகாரிக்கு ரவுடி மிரட்டல் - வாட்ஸ்-அப்பில் பரவும் ஆடியோ
    X

    மதுரை சிறைத்துறை பெண் அதிகாரிக்கு ரவுடி மிரட்டல் - வாட்ஸ்-அப்பில் பரவும் ஆடியோ

    மதுரை சிறைத்துறை பெண் போலீஸ் சூப்பிரண்டுக்கு பிரபல ரவுடி கொலை மிரட்டல் விடுத்த ஆடியோ வாட்ஸ் -அப்பில் வைரலாக பரவி வருகிறது.#RowdyThreat

    மதுரை:

    தேனி மாவட்டம், பெரிய குளம் அருகே உள்ள ஜெயமங்கலத்தைச் சேர்ந்தவர் புல்லட் நாகராஜன், பிரபல ரவுடி. இவர் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி என 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. எனவே அவர் தலைமறைவாக இருந்து வருகிறார்.

    புல்லட் நாகராஜனின் அண்ணன் கடந்த 2006-ம் ஆண்டு ஒரு கொலை வழக்கில் கைதாகி, மதுரை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்தார்.

    இவர் தூக்க மாத்திரைகளை அதிகம் கேட்டு வாங்கி சாப்பிட்டு வந்தார். கடந்த வாரம் சிறையில் சோதனைக்கு வந்த பெண் டாக்டரிடம், தனக்கு தூக்க மாத்திரைகளை அதிகம் தரும்படி வற்புறுத்தினார். இதற்கு பெண் டாக்டர் மறுத்ததால் ஆத்திரம் அடைந்த அவர், தனது சட்டையை கழற்றி டாக்டரின் முகத்தில் வீசினார்.

    இது குறித்து டாக்டர் கொடுத்த புகாரின் பேரில் மதுரை சிறைத்துறை போலீஸ் சூப்பிரண்டு ஊர்மிளா, விசாரணை நடத்தினார். மேலும் சிறை கமாண்டோக்கள் அவரை தூக்கி வந்து சிறையில் அடைத்தனர்.

    இந்த நிலையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி புல்லட் நாகராஜனின் அண்ணன், நடத்தை விதி காரணமாக அன்று இரவே விடுதலை செய்யப்பட்டார்.

    வெளியே வந்த அவர், தனது தம்பி புல்லட் நாகராஜனிடம் இந்த வி‌ஷயத்தை தெரிவித்தார். இதனால் கோபமடைந்த புல்லட் நாகராஜன், மதுரை சிறைத்துறை சூப்பிரண்டு ஊர்மிளா மற்றும் பெண் டாக்டருக்கு வாட்ஸ்-அப் மூலம் மிரட்டல் விடுத்துத்துள்ளார்.

    ‘கிரேட் ஜெனரல்’ புல்லட் நாகராஜன் பேசுகிறேன். தமிழ்நாட்டில் நான் பார்க்காத ஜெயில் கிடையாது. என் கண் முன்னாடி எத்தனையோ பேரை ஜெயிலில் அடித்து இருக்கீங்க. மதுரை ஜெயிலை பொறுத்த வரை உங்களுக்கு நிர்வாகத் திறமையே கிடையாது.

    கைதிகளை அடிப்பதற்காகவே கமாண்டோ பார்ட்டிகளை வைத்திருக்கிறீர்களா? உங்களை மாதிரி சிறையில் கைதியை அடித்த ஒரே காரணத்துக்காக, ஜெயிலர் ஜெயப்பிரகாஷை எரித்துக் கொன்றது ஞாபகம் இருக்கிறதா? ஏன் திருந்த மறுக்கிறீர்கள்?

    நாங்க திருந்தி இப்ப பெரிய ஆளா இருக்கோம். கைதி யாருக்காவது பிரச்சினை வரட்டும். நீங்கள் என்ன செய்தீர்களோ, அதையே நான் செய்ய வேண்டியது இருக்கும்.

    “ஆறிலும் சாவு, நூறிலும் சாவு”. அதைப்பற்றி இந்த புல்லட் நாகராஜன் கவலைப்பட மாட்டான். உங்களுக்கு ஒரு வாய்ப்பு தருகிறேன்.

    தலைமை காவலர் கஞ்சா கடத்துகிறார். அவரை வைத்து கைதிகள் காசை கொள்ளையடிக்கிறீர்கள். இதற்கு வெட்கமே இல்லையா? இதை விட்டு விட்டு வேறு வேலை பார்க்கலாமே.

    இவ்வளவு பேசுகிறேன், ஏதாவது செய்து பாருங்கள். உங்களால் முடியாது. நான் பழைய புல்லட் நாகராஜன் கிடையாது.

    நீங்கள் எப்படியும் வெளியே வந்து தானே ஆகனும். நான் ஒன்றும் செய்ய மாட்டேன். என் பயலுக ஏதாவது செய்திடு வாங்க. அப்புறம் லாரி உங்க மேல ஏறலாம். பொம்பளையா இருக்கீங்க, திருந்துங்க....

    இவ்வாறு அதில் பேசி உள்ளார்.

    சிறைத்துறை எஸ்.பி.க்கு விடுக்கப்பட்டுள்ள கொலை மிரட்டல் வைரலாக பரவி வருகிறது. இது சிறைத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தலைமறைவாக உள்ள புல்லட் நாகராஜனை போலீசார் தேடி வருகிறார்கள். இது குறித்து மதுரை மாநகர போலீஸ் கமி‌ஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதத்திடம் கேட்டபோது, சிறைத்துறை போலீஸ் சூப்பிரண்டு ஊர்மிளா இந்த மிரட்டல் குறித்து போலீசில் புகார் செய்யவில்லை. புகார் செய்தால் நடவடிக்கை எடுப்போம் என்றார். #RowdyThreat

    Next Story
    ×