
கடலூர் மாவட்டம் சோழதரம் அருகே உள்ள காவாளக்குடி பகுதியை சேர்ந்தவர் பாண்டியராஜ் (வயது 57), விவசாயி. இவர் அந்த பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் நெல் பயிரிட்டுள்ளார்.
இவரது வயலில் புடையூர் பகுதியை சேர்ந்த சங்கர் (38) என்பவர் வேலைபார்த்து வருகிறார். சங்கருக்கு சம்பளம் கொடுப்பதற்காக பாண்டியராஜ் நேற்று மாலை புடையூர் பகுதிக்கு சென்றார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த பூபாலன் மற்றும் அவரது உறவினர்கள் 8 பேருடன் சேர்ந்து பாண்டியராஜை வழிமறித்தனர்.
பின்னர் எதற்காக நீ எங்கள் ஊருக்கு வருகிறாய், சங்கருக்கு பணம் கொடுக்க கூடாது என கூறி பாண்டியராஜிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் தகராறு முற்றி பூபாலன் மற்றும் அவரது உறவினர்கள் 9 பேரும் சேர்ந்து பாண்டியராஜை சரமாரியாக தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.
இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த பாண்டிய ராஜை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து சோழதரம் போலீசில் பாண்டிய ராஜ் புகார் செய்தார். புகாரின் பேரில் பூபாலன் மற்றும் அவரது உறவினர்கள் சகுந்தலா, சிவநேசன், விஜய லட்சுமி, விஜயா, அழகேசன், ஸ்ரீதர், ராஜேந்திரன், தட்சணா மூர்த்தி ஆகிய 9 பேர் மீதும் வழக்குபதிவு செய்தனர். இவர்களில் சிவநேசன், தட்சணா மூர்த்தி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மற்றவர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.