search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அழகிரியின் அமைதி பேரணி தொடங்கியது - வாலாஜா சாலையில் பலத்த பாதுகாப்பு
    X

    அழகிரியின் அமைதி பேரணி தொடங்கியது - வாலாஜா சாலையில் பலத்த பாதுகாப்பு

    கருணாநிதியின் நினைவிடம் நோக்கி மு.க.அழகிரி அமைதி பேரணியை தொடங்கினார். இந்த பேரணி வாலாஜா சாலை வழியாக கடற்கரை சாலை சென்றடைகிறது. #MKAlagiri #AlagiriPeaceRally #DMK
    சென்னை:

    தி.மு.க.வில் தென்மண்டல அமைப்பு செயலாளர் பொறுப்பை வகித்த மு.க.அழகிரி, சகோதரர் மு.க.ஸ்டாலினுடன் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து 2014-ம் ஆண்டு மார்ச் 25-ந்தேதி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். கருணாநிதி உயிரோடு இருக்கும் வரை அவர் தி.மு.க.வில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை. தி.மு.க.வில் சேர அவர் மேற்கொண்ட முயற்சிகளும் தோல்வியடைந்தன.

    கருணாநிதியின் மறைவுக்கு பிறகு அமைதியாக இருந்து வந்த மு.க.அழகிரி, கடந்த மாதம் 13-ந்தேதி தனது குடும்பத்தினருடன் கருணாநிதி நினைவிடம் வந்து அஞ்சலி செலுத்தினார். அப்போது, நிருபர்களுக்கு பேட்டியளித்த மு.க.அழகிரி, ‘எனது அப்பாவிடம் வந்து ஆதங்கத்தை தெரிவித்தேன். அது என்ன என்பது உங்களுக்கு இப்போது தெரியாது. கருணாநிதியிடம் உண்மையாக விசுவாசம் கொண்ட தொண்டர்கள் அனைவரும் என் பக்கம்தான் இருக்கிறார்கள்’ என்று அதிரடியாக கூறினார்.



    அதன்பின்னர் மதுரை சென்று தன் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய மு.க.அழகிரி, சென்னையில் கருணாநிதி நினைவிடம் நோக்கி செப்டம்பர் 5-ம் தேதி அமைதி பேரணி நடத்த இருப்பதாகவும், அதில் தனது ஆதரவாளர்கள் ஒரு லட்சம் பேர் கலந்துகொள்வார்கள் என்றும் அறிவித்தார்.

    அதன்படி பேரணிக்கான முன்னேற்பாடுகளை செய்வதற்காக நேற்று முன்தினமே மு.க.அழகிரி மதுரையில் இருந்து சென்னை வந்தார். அவரது சார்பில், அமைதி பேரணிக்கு போலீசாரிடம் அனுமதி வேண்டி மனு அளிக்கப்பட்டது. போலீசாரும் பேரணி நடத்த அனுமதி அளித்தனர்.

    அதன்படி திருவல்லிக்கேணி போலீஸ் நிலையம் அருகே வாலாஜா சாலையில் இருந்து இன்று காலை 11.25 மணிக்கு மு.க.அழகிரி தலைமையில் அமைதி பேரணி தொடங்கியது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வந்திருந்த ஏராளமானோர் பேரணியில் கலந்துகொண்டுள்ளனர்.



    இந்தப் பேரணி வாலாஜா சாலை வழியாக, மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடம் சென்றடைகிறது. அங்கு, மு.க.அழகிரி மலர்தூவி அஞ்சலி செலுத்துகிறார். மேலும், தனது அரசியல் பயணத்தின் அடுத்தகட்ட நகர்வு குறித்து முக்கிய அறிவிப்பை அவர் வெளியிடுவார் என்றும் பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது. மு.க.அழகிரியின் அமைதி பேரணியை தொடர்ந்து, வழிநெடுகிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கருணாநிதியின் நினைவிடத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. #MKAlagiri #AlagiriPeaceRally #DMK
    Next Story
    ×