search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓமலூர் அருகே மினிலாரி மோதி கட்டிட மேஸ்திரி பலி
    X

    ஓமலூர் அருகே மினிலாரி மோதி கட்டிட மேஸ்திரி பலி

    ஓமலூர் அருகே பிறந்து 10 நாட்களே ஆன தனது பச்சிளம் ஆண் குழந்தைக்கு புத்தாடை எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் பார்க்க சென்ற கட்டிட மேஸ்திரி மினிலாரி மோதி பரிதாபமாக இறந்தார்.
    ஓமலூர்:

    ஓமலூரை அடுத்த பொட்டியபுரம் கொண்டையனூர் பகுதியை சேர்ந்தவர் அமுதன். இவருடைய மகன் கார்த்திகேயன் (வயது 30), கட்டிட மேஸ்திரி. இவருடைய மனைவி மகேஸ்வரி. இவர்களுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்தது.

    இந்த நிலையில் கர்ப்பம் அடைந்த மகேஸ்வரி பிரசவத்திற்காக, வெள்ளார் சோழிங்கனூரில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு சென்றார். அங்கு அவருக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

    இதைத்தொடர்ந்து தனது மகனை காண கார்த்திகேயன் மாமனார் ஊருக்கு கடந்த சில நாட்களாக சென்று வந்தார். இந்த நிலையில் தனக்கு பிறந்த மகனுக்கு புத்தாடைகள் வாங்கிக்கொண்டு, தனது மோட்டார் சைக்கிளில் நேற்று முன்தினம் இரவு மாமனார் ஊருக்கு குழந்தையை பார்க்க புறப்பட்டு சென்றார்.

    கொங்குப்பட்டி சுமை தாங்கி அருகே சென்றபோது, எதிரே வந்த மினிலாரி, மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்த கார்த்திகேயன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இதையடுத்து விபத்துக்குள்ளான மினிலாரி டிரைவர் வண்டியை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், தீவட்டிப்பட்டி போலீசார் அங்கு விரைந்து வந்து கார்த்திகேயனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓமலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விபத்தை ஏற்படுத்திவிட்டு தலைமறைவான மினிலாரி டிரைவரை தேடி வருகிறார்கள். பிறந்து 10 நாட்களே ஆன தனது ஆண் குழந்தையை பார்க்க புத்தாடையுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற கட்டிட மேஸ்திரி விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. 
    Next Story
    ×