search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லால்குடி அருகே மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் வாலிபர் பலி
    X

    லால்குடி அருகே மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் வாலிபர் பலி

    லால்குடி அருகே மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் வாலிபர் பரிதாபமாக இறந்தார். வக்கீல் உள்பட 3 பேர் படுகாயமடைந்தனர்.
    லால்குடி:

    லால்குடி அருகே உள்ள திருமங்கலம் மேலத்தெருவை சேர்ந்தவர் பாண்டியன். இவருடைய மகன் விக்னேஷ்குமார் (வயது 25). சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பிட்டராக வேலை செய்து வந்தார். சொந்த ஊருக்கு வந்திருந்த விக்னேஷ்குமார், தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த சக்திவேல் மகன் செல்வகுமார்(19), ஜெயசேகர் மகன் கார்த்திகேயன்(18) ஆகியோருடன் ஒரே மோட்டார் சைக்கிளில் பூவாளூர்-தச்சன்குறிச்சி சாலையில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது அருந்தியதாக கூறப்படுகிறது. பின்னர் அவர்கள் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

    மோட்டார் சைக்கிளை விக்னேஷ்குமார் ஓட்ட நண்பர்கள் 2 பேரும் பின்னால் அமர்ந்திருந்தனர். பூவாளூர் கத்திரிக்கா சாலையில் பிள்ளையார் கோவில் அருகே வந்தபோது, சாலை வளைவில் எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதாமல் இருக்க விக்னேஷ்குமார் மோட்டார் சைக்கிளை திருப்பினார். இதில் நிலைதடுமாறி சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதியது.

    அப்போது எதிரே லால்குடியை அடுத்த மேட்டுப்பட்டியை சேர்ந்த வக்கீல் பாஸ்கர்(68) ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில், 4 பேரும் படுகாயமடைந்தனர். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி விக்னேஷ்குமார் இறந்தார். பாஸ்கர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் லால்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதீஸ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 
    Next Story
    ×