search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குட்டையில் மூழ்கி பலியான மாணவர்கள்.
    X
    குட்டையில் மூழ்கி பலியான மாணவர்கள்.

    சேலம் குரங்குச்சாவடியில் கல்குவாரி குட்டையில் மூழ்கி 2 பள்ளி மாணவர்கள் பலி

    சேலம் குரங்குச்சாவடியில் கல்குவாரி குட்டையில் மூழ்சி 2 பள்ளி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    கொண்டலாம்பட்டி:

    சேலம் ஜாகீர் அம்மாபாளையம், சாஸ்திரிநகர் பகுதியை சேர்ந்தவர் சிவபிரகா‌ஷம். இவரது மகன் கவுஷிகன் (வயது 15).

    இவரும் பக்கத்து வீட்டை சேர்ந்த ரவி மகன் மாரிமுத்து (16) என்பவரும் ஜங்சன், சுப்பிரணியன் நகர் கேட் எண்.1-ல் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தனர்.

    இந்த நிலையில், வெண்ணங்குடி முனியப்பன் கோவில் அருகே உள்ள பொன்குமார் மைன்ஸ் கல் குவாரி குட்டையில் தண்ணீர் தேங்கியுள்ளது.

    நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை நாள் என்பதால் கவுஷிகன், மாரிமுத்து தங்களுடைய நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து இந்த குட்டையில் குளிக்கச் சென்றனர்.

    கல்குவாரி குட்டையில் 5 பேரும் இறங்கி குளித்தனர். அப்போது கவுஷிகன், மாரிமுத்து ஆழமான பகுதிக்கு சென்று குளிக்க முற்பட்டனர். அவர்களுடன் சென்ற மற்ற 3 சிறுவர்களும், அங்கு போக வேண்டாம், ஆழமான பகுதி, தண்ணீருக்குள் பெரிய, பெரிய பாறங்கற்கள் இருக்கும் என்று கூறியதாக தெரிகிறது.

    ஆனால், கவுஷிகனும், மாரிமுத்தும் ஆழமான பகுதிக்கு சென்று குளித்தனர். அப்போது இரண்டு பேரும் திடீரென தண்ணீருக்குள் மூழ்கி விட்டனர். வெகு நேரமாகியும் தண்ணீரில் இருந்து 2 பேரும் வெளியே வராததால் பயந்துபோன மற்ற 3 சிறுவர்களும் குட்டையில் இருந்து வெளியேறி வீட்டிற்கு திரும்பினர்.

    3 சிறுவர்களும் பயந்து போய், மாணவர்கள் கவுஷிகன், மாரிமுத்து ஆகியோர் தண்ணீருக்குள் மூழ்கி விட்ட சம்பவம் குறித்து அவர்களது வீட்டில் சொல்லவில்லை.

    இதனிடையே தங்களது மகன்களை பல்வேறு இடங்களில் தேடியும் காணாததால் நேற்று இரவு சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் பெற்றோர் புகார் கொடுத்தனர்.

    இந்த நிலையில், இன்று காலை கல்குவாரி குட்டையில் மாணவர்கள் கவுஷிகன், மாரிமுத்து ஆகியோர் உடல்கள் மிதந்தது.

    இன்று காலையில் கல் உடைப்பதற்காக குவாரிக்கு வந்த தொழிலாளர்கள் இதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் உடனடியாக சூரமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    போலீசாரும், தீயணைப்பு நிலைய வீரர்களும் சம்பவ இடத்திற்கு சென்று கவுஷிகன், மாரிமுத்து உடல்களை குட்டையில் இருந்து மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    Next Story
    ×