search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரளாவில் பரவும் எலி காய்ச்சல் - தமிழக எல்லையில் தீவிர கண்காணிப்பு
    X

    கேரளாவில் பரவும் எலி காய்ச்சல் - தமிழக எல்லையில் தீவிர கண்காணிப்பு

    கேரளாவில் எலி காய்ச்சலுக்கு 29 பேர் பலியாகி இருப்பதால் தமிழக எல்லையில் முகாம் அமைத்து காய்ச்சல் பாதிப்புடன் யாராவது வருகிறார்களா? என சுகாதாரத்துறை கண்காணித்து வருகிறது.
    கோவை:

    கேரள மாநிலத்தில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பை தொடர்ந்து அங்கு எலி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. எலி காய்ச்சலுக்கு இதுவரை 29 பேர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எனவே எலி காய்ச்சல் பாதிப்புடன் கோவைக்கு வரும் நபர்களை கண்டறியவும், காய்ச்சல் பரவாமல் தடுக்கவும் சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி சந்தோஷ்குமார் கூறியதாவது:-

    எலி காய்ச்சல் எலிகளின் சிறுநீர் மூலமாக லெப்டோ பைரோசியஸ் என்ற வைரஸ் மூலம் பரவுகிறது. எலி காய்ச்சலை சாதாரண காய்ச்சல் என கவனிக்காமல் விட்டால் உயிரிழப்பை ஏற்படுத்தும்.

    இந்த காய்ச்சல் 7 நாள் முதல் 10 நாட்கள் வரை இருக்கும். காய்ச்சல் பாதிப்பு உடையவர்களுக்கு கை, கால் வலி, தலைவலியுடன் கண் சிவப்பாக மாறிவிடும். மேலும் அடிக்கடி வயிற்று வலியுடன் வாந்தியும் ஏற்படும். கவனிக்காமல் விட்டால் கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும்.

    எனவே காய்ச்சல் பாதிப்பு இருந்தால் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும். சுகாதார துறை சார்பில் அரசு ஆஸ்பத்திரி, ஆரம்ப, துணை சுகாதார நிலையங்களில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழக-கேரள எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில் முகாம் அமைத்து காய்ச்சல் பாதிப்புடன் கேரளாவில் இருந்து யாராவது வருகிறார்களா? என கண்காணித்து வருகிறோம். இது வரை கோவை மாவட்டத்தில் யாருக்கும் எலி காய்ச்சல் பாதிப்பு இல்லை.

    எலி காய்ச்சல் பரவாமல் தடுக்க பொதுமக்கள் சுற்றுபுறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும். மேற்கண்ட அறிகுறிகளுடன் காய்ச்சல் பாதிப்பு இருந்தால் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×