search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொப்பூர் அருகே புகையிலை பொருட்கள் பறிமுதல் - கைதான 4 பேர் சிறையில் அடைப்பு
    X

    தொப்பூர் அருகே புகையிலை பொருட்கள் பறிமுதல் - கைதான 4 பேர் சிறையில் அடைப்பு

    தொப்பூர் அருகே வாகன சோதனையின் போது பெங்களூரில் இருந்து புகையிலை பொருட்கள் கடத்தி வந்த 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
    தருமபுரி:

    கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு தருமபுரி வழியாக அடிக்கடி பான்பராக், குட்கா, ஹான்ஸ் போன்ற தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை மர்ம நபர்கள் கடத்தி செல்வதாக தருமபுரி மாவட்ட எஸ்.பி. பண்டி கங்காதருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை கண்காணித்து வாகன சோதனையில் ஈடுபட்டு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசாருக்கு உத்தரவிட்டார்.

    அவரது உத்தரவின் பேரில் கடந்த மாதத்தில் பெங்களூருவில் இருந்து குட்கா பொருட்களை தருமபுரி வழியாக கடத்தி வந்தவர்களையும், அவரது வண்டிகளையும் தொப்பூர் சோதனை சாவடி அருகே போலீசார் மடக்கி பிடித்தனர்.

    மீண்டும் குட்கா மற்றும் தடை செய்யப்ட்ட புகையிலை பொருட்களை தமிழகத்திற்கு கடத்தி செல்வதாக வந்த ரகசிய தகவலை கிடைத்தது. இதைத்தொடர்ந்து தொப்பூர் சோதனை சாவடி அருகே போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து கிருஷ்ணகிரி-தொப்பூர் வழியாக கோவை நோக்கி சென்ற ஒரு மினிலாரியை வழிமறித்து சோதனை நடத்தினர். போலீசார் மினிலாரியை சோதனை செய்தனர்.

    அப்போது அதில் 60 பண்டல்களில் 70 அட்டை பெட்டிகளில் அடைத்து மறைத்து ஹான்ஸ் புகையிலை பொருட்களை கடத்தி வந்தது தெரியவந்தது.

    வேனை ஓட்டி வந்த கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த மன்சூர் (வயது 33), அவருடன் வந்த கோவை மரக்கடையை பகுதியைச் சேர்ந்த அப்பாஸ் (34), முகம்மது கலில் (36), உக்கடம் பகுதியைச் சேர்ந்த முகமது ஆரிப் (25) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    கடத்தி வரப்பட்ட புகையிலை பொருட்களை கோவை பகுதியில் பதுக்கி வைத்து விற்பனை செய்வதற்காக பெங்களூருவில் உள்ள களாசிபாளையம் மார்க்கெட்டில் இருந்து கடத்தி கொண்டு வரப்பட்டது. தொப்பூர் சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அவர்கள் மாட்டிக் கொண்டனர்.

    இந்த புகையிலை பொருட்களை கடந்த 3 மாதமாக கோவையை சேர்ந்த பெண் வியாபாரி ராஜேஸ்வரிக்கு விற்பனை செய்ய கடத்தி வந்ததாக கைதான 4 பேரும் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து ராஜேஸ்வரியை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
    Next Story
    ×