search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் தமிழக மக்கள் எதிர்பார்க்கும் நல்ல தீர்ப்பு வரும்- தினகரன் பேச்சு
    X

    18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் தமிழக மக்கள் எதிர்பார்க்கும் நல்ல தீர்ப்பு வரும்- தினகரன் பேச்சு

    18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் 234 தொகுதிகளிலும் மக்கள் எதிர்பார்க்கிற நல்ல தீர்ப்பு வரும். மக்கள் விரும்பாத துரோக ஆட்சிக்கு முடிவு வரும் என்று ஆர்ப்பாட்டத்தில் தினகரன் பேசினார். #dinakaran #18mlas #edappadipalanisamy

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் காவிரி வெள்ளம் சென்றாலும் கடைமடை பாசன பகுதி பாலைவனமாக உள்ளதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று மாலை நடைபெற்றது.

    திருவாரூர் மாவட்ட செயலாளர் எஸ்.காமராஜ் தலைமை தாங்கினார்.மாநில பொருளாளர் எம்.ரெங்கசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.கு.சீனிவாசன், முன்னாள் நகர்மன்றத் தலைவர் சிவா.ராஜ மாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    அரசியல் ஆதாயத்திற்காக இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தவில்லை. நதிகள் உள்ள பகுதிகளில் தான் நாகரீகம் தோன்றியது.உலக வரலாற்றில் இடம் பெற்ற கரிகாலன் கட்டிய கல்லணையும், ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோவிலும் இன்றும் புகழ்பெற்று நிற்கிறது. கர்நாடகத்தில் மழை கொட்டி தீர்த்ததால் அங்குள்ள அணைகள் நிரம்பிய நிலையில் கர்நாடகம் காவிரிநீரை தந்தது. மேட்டூர் அணை இரண்டு முறை நிரம்பியது. ஆனால் அந்த நீர் கடலுக்கு சென்று கொண்டிருக்கிறது.

    ஜெயலலிதா ஆட்சி நடத்துகிறோம் என்று சொல்லிக் கொள்பவர்கள் தாங்களும் தங்கள் குடும்பமும் வாழ வேண்டும் என்பதற்காக தமிழகத்தையே சுரண்டிக் கொண்டிருக்கிறார்கள். குடி மராமத்து பணி, தூர் வாரும் பணி என்றெல்லாம் நிதி ஒதுக்கி கொள்ளையடித்து வருகிறார்கள். பல ஆண்டு போராட்டத்திற்குப் பின் உச்சநீதிமன்ற உத்தரவின் படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநில தேர்தலுக்காக காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை பா.ஜனதா இழுத்தடித்தது.

    18 எம்.எல்.ஏக்கள் வழக்கில் விரைவில் தீர்ப்பு வந்தவுடன் தமிழகத்தில் அரசின் பெரும்பான்மையை நிரூபிக்கும் கட்டாயம் வரும். 234 தொகுதிகளிலும் மக்கள் எதிர்பார்க்கிற நல்ல தீர்ப்பு வரும். மக்கள் விரும்பாத துரோக ஆட்சிக்கு முடிவு வரும்.

    கடலூர், நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பூமிக்கடியில் நிலக்கரி கிடைப்பதால் நிலக்கரி எடுக்க நிலங்களை தேர்வு செய்துள்ளார்கள். பூமிக்கடியில் வைரமே கிடைத்தாலும் தேவையில்லை.டெல்டா மாவட்டங்களில் விவசாய நிலங்களை காப்பாற்றுவோம். டெல்டா மாவட்டங்களில் விவசாயமும் விவசாயம் சார்ந்த தொழிலுமே நடக்க வேண்டும். எட்டு வழிச்சாலை தொலை நோக்குத் திட்டம் என ஆட்சியாளர்கள் சொல்கிறார்கள். ஆனால் ஆற்றுநீரை தேக்கி வைக்க முடியவில்லை.

    ஊழலை திசை திருப்ப ஆட்சியாளர்கள் ஊர், ஊராக சுற்றி வருகிறார்கள். மன்னார்குடியில் கூட்டம் போட்டு ஓ.பன்னீர்செல்வம் மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் பேசுகிறார்.

    ஆடிட்டர் குருமூர்த்தியின் தயவால் பா.ஜனதாவின் உத்தரவுப்படி தமிழகத்தில் ஆட்சி செய்கிறார்கள். ஓ. பன்னீர்செல்வத்திற்கு என்னைக் கண்டால் பயம் ஏற்படுகிறது.


    அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரி குடை பிடிப்பது போல் தமிழக அமைச்சர்களின் நிலை உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் பி.ஆர்.பாண்டியன், முன்னாள் அமைச்சர் வளர்மதி, நடிகை சி.ஆர்.சரஸ்வதி, அறந்தாங்கி ரத்தினசபாபதி எம்.எல்.ஏ., முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் குடவாசல் ராஜேந்திரன், திருச்சி முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக நீடாமங்கலம் ஒன்றிய செயலாளர் எம்.எஸ்.சங்கர் வரவேற்றார். முடிவில் நகர செயலாளர் எஸ்.சங்கர் நன்றி கூறினார். #dinakaran #18mlas #edappadipalanisamy

    Next Story
    ×