search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல்
    X

    கரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல்

    கரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட கலெக்டர் அன்பழகன் வெளியிட்டார்.
    கரூர்:

    கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 2019 சிறப்பு சுருக்க முறை திருத்த வரைவு வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட கலெக்டர் அன்பழகன் நேற்று வெளியிட்டார். பின்னர் இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி, கரூர் மாவட்டத்திலுள்ள அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம் (தனி) மற்றும் குளித்தலை ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளிலும் 2019-ம் ஆண்டிற்கான புகைப்படத்துடன் கூடிய வரைவு வாக்காளர் பட்டியல் இன்று (நேற்று) வெளியிடப்பட்டு கரூர் மற்றும் குளித்தலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள் மற்றும் வாக்குச்சாவடி அமைவிடங்கள் ஆகியவற்றில் பொதுமக்களின் பார்வைக்காக அடுத்த மாதம் (அக்டோபர்) 31-ந் தேதி வரை வைக்கப்படவுள்ளன.

    மேலும் வருகிற 8, 22-ந் தேதிகள் மற்றும் அக்டோபர் மாதம் 6, 13-ந் தேதிகளில் நடைபெறவுள்ள சிறப்பு கிராம சபை கூட்டங்களிலும் வாக்காளர் பட்டியல்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும். வருகிற 9, 23, மற்றும் அக்டோபர் மாதம் 7, 14-ந் தேதிகளில் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை அனைத்து வாக்குச் சாவடி அமைவிடங்களிலும் சிறப்பு முகாம்கள் நடை பெறவுள்ளன.

    மேலும் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் 250 வாக்குச்சாவடி மையங்களும், 159 வாக்குச்சாவடி அமைவிடங்களும், கரூர் சட்டமன்ற தொகுதியில் 261 வாக்குச்சாவடி மையங்களும், 94 வாக்குச்சாவடி அமைவிடங்களும், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதியில் 253 வாக்குச்சாவடி மையங்களும், 195 வாக்குச்சாவடி அமைவிடங்களும், குளித்தலை சட்டமன்ற தொகுதியில் 267 வாக்குச்சாவடி மையங்களும், 160 வாக்குச்சாவடி அமைவிடங்களும் என மொத்தம் 1,031 வாக்குச்சாவடி மையங்களும், 608 வாக்குச்சாவடி அமைவிடங்களும் உள்ளன.

    பொதுமக்கள் வாக்காளர் பட்டியலை பார்வையிட்டு அதில் அவர்களது பெயர், புகைப்படம் மற்றும் இதர பதிவுகள் சரியாக உள்ளதா? என்பதை உறுதி செய்து கொள்ளலாம். மேலும் அடுத்த ஆண்டு ஜனவரி 1-ந் தேதி அன்று 18 வயது நிறைவடைந்த, வாக்காளர்களாக பதிவு செய்யாத தகுதியுள்ள அனைவரும் வாக்காளர்களாக பதிவு செய்து கொள்ளலாம். நேற்று முதல் அடுத்த மாதம் அக்டோபர் 31-ந் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய மற்றும் இடமாற்றம் செய்ய அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி அமைவிட அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் வாக்காளர் பதிவு அலுவலர் ஆகியோரிடம் மனுக் களை அளிக்கலாம்.

    மேலும் http://www.nvsp.in என்ற இணையதளம் மூலமாகவும் மனுக்களை அளிக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வசுரபி, வருவாய் கோட்டாட்சியர்கள் சரவணமூர்த்தி (கரூர்), லியாகத் (குளித்தலை), தேர்தல் வட்டாட்சியர் விஜயகுமார், அனைத்து வட்டாட்சியர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    Next Story
    ×