search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீட் தேர்வு போராட்டத்தினால் மாணவர்களிடம் அரசியல் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது- திருமாவளவன் பேட்டி
    X

    நீட் தேர்வு போராட்டத்தினால் மாணவர்களிடம் அரசியல் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது- திருமாவளவன் பேட்டி

    நீட் தேர்வு போராட்டத்தினால் மாணவர்களிடம் அரசியல் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது என்று திருச்சியில் திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். #thirumavalavan #neet
    திருச்சி:

    திருச்சியில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நீட் தேர்வுக்கு எதிராக தன்னுடைய உயிரை மாய்த்த மாணவி அனிதாவின் ஓராண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அவரது நினைவாக, அவரின் சொந்த ஊரான குழுமூரில் நினைவு நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. அதன்திறப்பு விழா இன்று திராவிட கழக தலைவர் கி.வீரமணி தலைமையில் நடைபெறுகிறது.

    விழாவில் ஏராளமான ஜனநாயக சக்திகள் கலந்து கொள்கின்றன. அனிதாவின் நினைவாக அறக்கட்டளையும் தொடங்கப்படுகிறது. நீட்தேர்வினை தமிழகம் மட்டுமல்லாது இந்திய அளவில் ரத்து செய்ய வேண்டும். நீட் தேர்வு மத்திய அரசின் ஆதிக்கத்தையும், மாநில அரசின் கல்வி அதிகாரத்தை பறிக்கும் விதமாக உள்ளது. எனவே நீட் தேர்வை உனடடியாக ரத்து செய்ய வேண்டும். பொதுவாக போட்டி தேர்வுகள் என்றால் மாணவர்கள் அதனை எதிர்கொள்ள தயாராகின்றனர். ஆனால் நீட் தேர்வு போராட்டத்தினால் மாணவர்களிடம் அரசியல் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. அரசியல் கட்சிகள், தமிழ்தேசிய அமைப்புகள் சார்பில் நடத்தப்பட்ட போராட்டங்களினால் இந்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இதன் பலன் பிற்காலங்களில் தெரியும்.

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது ஆலையினை திறக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக ஆலை நிர்வாகம் செய்த மேல்முறையீட்டில், சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஆய்வு செய்ய தமிழர் அல்லாத ஒரு நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளார். 

    தமிழகத்தில் உள்ள நீதிபதியையோ அல்லது ஓய்வு பெற்ற நீதிபதியையோ நியமனம் செய்திருக்கலாம். இந்த விஷயத்தில் தமிழக அரசின் அழுத்தம் எந்த அளவில் உள்ளது என்பது தெரியவில்லை. ஸ்டெர்லைட் ஆலையினை மீண்டும் திறக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் ஆலை நிர்வாகத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. தேசிய பசுமை தீர்ப்பாயமும் இதற்கு ஆதரவாக செயல்படுகிறது.

    முக்கொம்பு மேலணையில் ஏற்கனவே நிதி ஒதுக்கப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  இதற்கிடையே கொள்ளிடம் அணை இடிந்துள்ளது. இது குறித்து அரசு, முக்கொம்பு அணையில் மேற்கொள்ளப்பட்ட பணிகள், மதகுகள் உடைந்ததற்கான காரணங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். ஆற்றில் மணல் அள்ளியதே அணை இடிந்ததற்கான காரணம் என சுற்றுச்சூல் வல்லுணர்கள் கூறுகின்றனர்.
     
    இந்த தொடர் மணல் கொள்ளையினால் கல்லணையும் இடியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் நடக்கும் மணல் கொள்ளைகளை முற்றிலுமாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி 100 சதவீதம் அரசியல் ஈடுபாடு உள்ளவர். அவரின் இரங்கல் கூட்டத்தில் அரசியல் கருத்து மரபுகள் நடந்திருப்பது இயல்பானது. கலைஞர் அனைத்து இடங்களிலும் அரசியல் தாக்கத்தினை பதிவு செய்தவர். 

    நெல்லையில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில், வி.சி.க. சார்பில் மதசார்பற்ற சக்திகள் ஒன்றிணைய வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.

    தற்போது நடைபெற்ற தேசிய அளவிலான அரசியல் கட்சிகள் பங்கேற்ற கூட்டத்திலும் அதே கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மருத்து வமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அவர் மீண்டும் பூரண குணமடைந்து அரசியல் பணியில் முழு ஈடுபாடுடன் செயல்பட வேண்டும். 

    இவ்வாறு அவர் கூறினார். #thirumavalavan #neet
    Next Story
    ×