search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடல்சார் வர்த்தக சேவையில் சென்னை துறைமுகம் மைல் கல் - பொன்.ராதாகிருஷ்ணன் பெருமிதம்
    X

    கடல்சார் வர்த்தக சேவையில் சென்னை துறைமுகம் மைல் கல் - பொன்.ராதாகிருஷ்ணன் பெருமிதம்

    கச்சா எண்ணெயுடன் மிகப்பெரிய கப்பல் வந்ததன் மூலம் கடல்சார் வர்த்தக சேவையில் சென்னை துறைமுகம் மைல் கல்லை எட்டியிருப்பதாக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். #ChennaiPort
    சென்னை:

    கிரீஸ் நாட்டின் போர்டோ எம்போரியஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ‘எம்.டி. நியூ டைமண்ட்’ என்ற மிகப்பெரிய கப்பல், கச்சா எண்ணெயுடன் சென்னை துறைமுகத்துக்கு வந்துள்ளது. கேப்டன் நிகிடாஸ் என்பவரின் தலைமையின் கீழ் 24 பணியாளர்களுடன் கடந்த 20-ந் தேதி ஈராக்கில் உள்ள அல் பஸ்ராவில் இருந்து புறப்பட்டு நேற்று காலை 9.46 மணிக்கு இந்த கப்பல் சென்னைக்கு வந்தது.

    சென்னை துறைமுகத்தில் இதுவரை கையாளப்பட்ட எண்ணெய் கப்பல்களில் இது தான் மிகப்பெரியது. இந்த கப்பலை மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், சென்னை துறைமுக தலைவர் ரவீந்திரன் ஆகியோர் வரவேற்றனர்.

    பின்னர் பொன்.ராதா கிருஷ்ணனும், ரவீந்திரனும் நிருபர்களிடம் கூறியதாவது:-


    சென்னை துறைமுகத்துக்குள் முதல் முறையாக மிகப்பெரிய கப்பல் வந்து இருக்கிறது. இதன் மூலம் கடல்சார் வர்த்தக சேவையில் சென்னை துறைமுகம் மைல் கல்லை எட்டி உள்ளது. 1 லட்சத்து 60 ஆயிரம் டன் கச்சா எண்ணெயை சென்னையில் இறக்குமதி செய்ய வந்து இருக்கிறது. இந்த கப்பல் 3 லட்சம் டன் கச்சா எண்ணெயை சுமந்து வரும் திறன் கொண்டது.

    தற்போது சோதனை ஓட்டமாக அதன் கொள்ளளவை பாதியாக குறைத்து கொண்டுவரப்பட்டு இருக்கிறது. முழு கொள்ளளவுடன் கப்பல் துறைமுகத்துக்குள் வருவதற்கு 20 மீட்டர் ஆழம் தேவை. நமது துறைமுகம் 12 மீட்டர் ஆழம்தான் இருக்கிறது. அதை 16 மீட்டராக ஆழப்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இன்னும் 2 ஆண்டுக்குள் 16 மீட்டர் ஆழத்தை நடைமுறைக்கு கொண்டு வந்துவிடுவோம். அப்படி வந்தால் 2 லட்சத்து 50 ஆயிரம் டன் கொள்ளளவு கொண்ட எண்ணெய் கப்பலை நிறுத்த முடியும். துறைமுக விரிவாக்க பணிகளுக்காக ரூ.14 கோடிக்கு ஒப்பந்தம் போடப்பட்டு இருக்கிறது.

    சென்னை துறைமுகத்துக்குள் மிகப்பெரிய கச்சா எண்ணெய் கப்பல் வருவதால் துறைமுக உபயோகிப்பாளர்களுக்கு 30 முதல் 40 சதவீதம் செலவினம் குறையும்.

    மதுரவாயல்-துறைமுகம் பறக்கும் சாலை திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கை 2 மாதத்தில் முடிந்துவிடும். குளச்சல் துறைமுகத்துக்கான விரிவான திட்ட அறிக்கை இறுதி கட்டத்தில் இருக்கிறது.

    தூய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக துறைமுகத்துக்குள் சாலை மற்றும் கப்பல் தளங்களில் தூசுவை அகற்ற சுத்தம் செய்யும் எந்திரம் வாங்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் ஒரு மணி நேரத்தில் 5 கிலோ மீட்டர் தூரத்தை சுத்தம் செய்ய முடியும். சென்னை துறைமுகத்தில் மணல் இறக்குமதி செய்ய ஒப்புதல் வாங்கப்பட்டு இருக்கிறது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். #ChennaiPort
    Next Story
    ×