search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விடிய விடிய பெய்த மழையால் குளுமையான சூழலை அனுபவித்த சென்னை மக்கள் - இன்றும் மழைக்கு வாய்ப்பு
    X

    விடிய விடிய பெய்த மழையால் குளுமையான சூழலை அனுபவித்த சென்னை மக்கள் - இன்றும் மழைக்கு வாய்ப்பு

    சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நள்ளிரவு தொடங்கி விடிய விடிய கனமழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. #ChennaiRains #TamilnaduRains
    சென்னை:

    தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்த நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்தது. அதேசமயம் வெப்பச் சலனம் காரணமாக உள்மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்து குளிர்வித்து வருகிறது. குறிப்பாக வட கடலோர மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

    சென்னைப் பொருத்தவரை பகல் வேளையில் வெயிலின் தாக்கம் இருந்தாலும், மாலை மற்றும் இரவு நேரங்களில லேசான மழை பெய்து வருகிறது.

    இந்நிலையில், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நள்ளிரவில் தொடங்கி விடிய விடிய பரவலாக கனமழை பெய்தது. விடிந்த பிறகும் மழை தூறிக்கொண்டே இருந்தது. இதன் காரணமாக வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழலை மக்கள் அனுபவித்தனர்.

    விடிய விடிய பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. பல்வேறு பகுதிகளில் மழை நீர் வடிகால்களுக்கு தண்ணீர் செல்லும் பாதைகளில் அடைப்பு ஏற்பட்டதால் குளம்போல் தேங்கி நின்றது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள், குறிப்பாக இரு சக்கர வாகன ஓட்டிகள் நிதானமாக வாகனங்களை ஓட்டிச் சென்றனர்.



    நேற்று காலை முதல் இன்று காலை வரை சென்னையில் 4.1 செமீ மழை பெய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #ChennaiRains #TamilnaduRains
    Next Story
    ×