search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொம்மிடி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் பலி
    X

    பொம்மிடி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் பலி

    மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து நடந்த பகுதியில் வேகத்தடை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பாப்பிரெட்டிப்பட்டி:

    தருமபுரி மாவட்டம் பொம்மிடியை அடுத்த பையர்நத்தம் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி அருகே டாஸ்மாக் கடை அமைத்து உள்ளது. இந்த கடையில் நேற்று மாலை கூட்டம் அதிகமாக இருந்தது. டாஸ்மாக் கடையின் வெளியே குடிமகன்கள் குடித்துவிட்டு நடுரோட்டில் நடமாடி கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக ஒட்டுபள்ளம் பகுதியைச் சேர்ந்த பூவரசன் (வயது21) என்பவரும், அவரது நண்பர் தனசேகரன் என்பவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்தனர். எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிளில் அச்சம்பட்டியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் வேகமாக வந்து பூவரசன் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதினார்.

    இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர். உடனே அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து காயமடைந்த பூவரசனையும், வெங்கடேசனையும் மீட்டு பையர்நத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    பின்னர் மேல்சிகிச்சைக்காக பூவரசனை சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு அவர் இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். வெங்கடேசனை மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்து குறித்து பொம்மிடி போலீசார் விசாரித்ததில், பூவரசனும், வெங்கடேசனும் எதிரெதிரே சரியான பாதையில் வந்தனர். டாஸ்மாக் கடையின் அருகே வரும் குடிமகன்கள் நடுரோட்டில் அலை மோதியதால் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த வெங்கடேசன் நிலைத் தடுமாறி எதிரே வந்த பூவரசன் மீது எதிர்பாராத விதமாக மோதி விபத்து ஏற்பட்டது.

    இதில் பூவரசன் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்தில் அவரது நண்பர் தனசேகரன் காயம் எதுவுமின்றி உயிர் தப்பினார். இறந்துபோன பூவரசன் கடத்தூரில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.இ. மெக்கானிக்கல் படித்தது வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த பகுதியில் குடிக்காரர்கள் தங்களது வண்டிகளை நடுரோட்டில் நிறுத்தி விடுவதால் பாதை குறுகி சாலையில் செல்லும் வாகனங்கள் அடிக்கடி மோதி கொண்டு விபத்துக்கள் நடைபெறுகிறது.

    எனவே, அரசு பள்ளி அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்றகோரியும், இந்த பகுதியில் வேகத்தடை அமைக்க கோரியும் பலமுறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை.

    இனிமேலாவது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பள்ளியின் அருகே உள்ள டாஸ்மாக் கடையை மாற்று இடத்தில் வைக்கவும், இந்த சாலையில் வேகத்தடையை அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த பகுதி பொதுமக்கள் கூறினர்.

    Next Story
    ×