search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓடும் ரெயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை: போலீசார் நெருங்கியதால் வடமாநில கும்பல் தப்பி ஓட்டம்
    X

    ஓடும் ரெயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை: போலீசார் நெருங்கியதால் வடமாநில கும்பல் தப்பி ஓட்டம்

    சேலத்தில் இருந்து சென்னை வந்த ரெயிலில் ரூ.5.78 கோடி கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நெருங்கியதால் வடமாநில கும்பல் தங்களது செல்போன்களை சுவிட்ச் ஆப் செய்து தப்பியுள்ளனர். #ChennaiTrainRobbery #RBIMoney
    சேலம்:

    சேலத்தில் இருந்து சென்னைக்கு கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8-ந்தேதி இரவு சென்ற ரெயிலின் தனிப்பெட்டியில் ரூ.323 கோடி கொண்டு செல்லப்பட்டது. சென்னை செல்லும் வழியில் ரெயிலின் மேற்கூரையை துளையிட்டு ரூ.5.78 கோடியை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

    சென்னை எழும்பூருக்கு மறுநாள் அதிகாலை சென்றபோது தான் இந்த கொள்ளை சம்பவம் பற்றி போலீசாருக்கு தெரியவந்தது.

    தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகிறார்கள். பல்வேறு கட்டங்களாக இந்த விசாரணை முடுக்கி விடப்பட்டது.

    இந்த வழக்கில் கொள்ளையர்கள் குறித்து துப்பு துலக்க ரெயில் பெட்டி சேலத்திற்கு எங்கிருந்து கொண்டு வரப்பட்டது என்ற விபரத்தை எடுத்த அதிகாரிகள், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) உதவியை நாட முடிவு செய்தனர்.

    இஸ்ரோ விஞ்ஞானிகளிடமும் ஆலோசனை நடத்தினார்கள்.

    இதையடுத்து ரெயில் கொள்ளை நடந்த அன்று சேலத்தில் இருந்து சென்னை வரை உள்ள 350 கிலோ மீட்டர் தூரத்தில் செயற்கைக்கோளில் பதிவாகியிருந்த படங்களை விஞ்ஞானிகள் எடுத்தனர். இந்த படங்களை சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் அவர்கள் ஒப்படைத்தனர்.

    இந்த புகைப்படங்களை கொண்டு ரெயில் எங்கு வரும்போது, கொள்ளை நடந்தது? என்ற தகவலை திரட்டினார்கள். இதில் சேலத்தில் இருந்து விருத்தாச்சலம் வரையில் உள்ள பகுதிகளில் தான் ரெயிலின் மேற்கூரை வெட்டப்பட்டது தெரிய வந்தது.


    சுமார் 1 லட்சம் செல்போன் எண்களை ஆய்வு செய்ததில் இந்த கொள்ளை சம்பவத்தில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த கும்பல் ஈடுபட்டுள்ளது கண்பிடிக்கப்பட்டது.

    கொள்ளை நடந்து 2 ஆண்டுகள் கழித்து இந்த வழக்கில் துப்பு துலங்கியதால் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சுறுசுறுப்பு அடைந்தனர். மத்திய பிரதேச மாநில போலீசாருடன் இணைந்து கொள்ளையர்களை பிடிப்பதற்கான பணியில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஈடுபட்டனர்.

    சேலம் கோட்டத்திற்கு உட்பட்ட சேலம், நாமக்கல், ஈரோடு, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ள ரெயில்வே நிலையங்களில் வடமாநிலங்களை சேர்ந்த ஏராளமான ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

    கொள்ளை கும்பலுடன் இந்த ஊழியர்களில் யாருக்காவது தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து கடந்த 2 நாட்களாக சேலம் கோட்டத்தில் வேலை பார்த்து வரும் வடமாநில ஊழியர்களின் செல்போன் எண்களை கைப்பற்றி சி.பி.சி.ஐ.டி. போலீசார் மற்றும் சைபர் கிரைம் போலீசார் இணைந்து ஆய்வு செய்து வருகின்றனர்.

    இதனால் விரைவில் குற்றவாளிகள் பிடிபடலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

    இதற்கிடையே விசாரணையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை அறிந்த வடமாநில கொள்ளையர்கள் உஷார் அடைந்துள்ளனர். போலீசார் தங்களை நெருங்குவதை அறிந்த அவர்கள், கடைசியாக தாங்கள் பயன்படுத்தி வந்த செல்போன் எண்களை சுவிட்ச் -ஆப் செய்து விட்டு வேறு இடங்களுக்கு தப்பி ஓடிவிட்டனர்.

    இதனால் போலீசாரால் கொள்ளையர்களின் இருப்பிடத்தை கண்டு பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கொள்ளையர்களை பிடிக்கும் நடவடிக்கையில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இருந்தாலும், கொள்ளையில் ஈடுபட்ட கும்பலை பிடிக்க 20 பேர் கொண்ட 4 தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.  #ChennaiTrainRobbery #RBIMoney
    Next Story
    ×