search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவண்ணாமலையில் பல்லவ மன்னன் காலத்து கல்வெட்டு கண்டெடுப்பு
    X

    திருவண்ணாமலையில் பல்லவ மன்னன் காலத்து கல்வெட்டு கண்டெடுப்பு

    திருவண்ணாமலை பொற்குணம் கிராமத்தில் பல்லவ மன்னன் காலத்து கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை பொற்குணம் கிராமத்தில் கூட்டுறவு கடைக்கு அருகே கல்வெட்டு ஒன்று கிடப்பதாக திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் தலைவர் பிரகாசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் குழுவினருடன் சென்று ஆய்வு செய்தார்.

    இதுகுறித்து கல்வெட்டு ஆய்வறிஞர் ராஜகோபால் கூறுகையில், இந்த கல்வெட்டு கி.பி. 869 முதல் 901 வரை ஆட்சி புரிந்த பல்லவ மன்னன் கம்பவர்மனுடைய 25-வது ஆண்டு கல்வெட்டு ஆகும். இது பொறிக்கப்பட்ட ஆண்டு கி.பி. 894-ம் ஆண்டாக இருக்கலாம். பல்லவ மன்னன் கம்பபோத்தரைய விக்கிரமன் என்று இதில் குறிப்பிடப்பட்டு உள்ளது. பொற்குணம் என்று அழைக்கப்படும் இவ்வூர் பொற்குன்றம் என்று கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது.

    இதில் வேணாட்டுக் காந்தளூர் கூற்றத்து புதனாட்பாடியில் ஏரியின் கிழக்கு மதகின் அருகே உள்ள நீரோடும் பாதையில் இருந்த இடத்தை பண்படுத்தி விளை நிலமாக்கி கொடுத்ததை இக்கல்வெட்டு கூறுகிறது. அப்படி திருத்தி விளை நிலமாக்கப்பட்ட நிலத்திற்கு கல்கிலியேரிச் செறு என்று பெயரும் கொடுக்கப்பட்டு உள்ளது.

    இந்த கொடையான ஏரிபராமரிப்பு நிலத்தை என்றென்றும் பாதுக்காத்து நிலைக்க செய்பவர்களின் கால்களை தன் தலை மீது வைத்துப் போற்றுவதாகவும் அந்த கல்வெட்டில் கங்க மன்னர் பிருதிகங்கரையர் குறிப்பிட்டுள்ளார்.

    தொடர்ந்து இந்த கல்வெட்டு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×