search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈரோடு மாவட்டத்துக்கு என்னுடைய ஆதரவு தொடர்ந்து இருக்கும் - கலெக்டர் பிரபாகர் பேச்சு
    X

    ஈரோடு மாவட்டத்துக்கு என்னுடைய ஆதரவு தொடர்ந்து இருக்கும் - கலெக்டர் பிரபாகர் பேச்சு

    நான் பணிமாறுதல் பெற்றாலும் ஈரோடு மாவட்டத்திற்கு என்னுடைய ஆதரவு தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும் என்று கலெக்டர் பிரபாகர் கூறியுள்ளார்.
    ஈரோடு:

    ஒளிரும் ஈரோடு அமைப்பு சார்பில் கதிரம்பட்டி மூலக்கரை கிராமம் வாரக்காடு தோட்டம் பகுதியில் பெரும் பள்ளம் ஓடை குறுக்கே ரூ.25 லட்சம் செலவில் புதிய தடுப்பணை கட்டப்பட்டு உள்ளது. 3 ஏக்கர் பரப்பளவில் தண்ணீர் தேக்கும் அளவுக்கு இந்த தடுப்பணை கட்டப்பட்டுள்ளது.

    இது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. மாவட்ட கலெக்டர் பிரபாகர் தலைமை தாங்கினர். எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு ஆகியோர் கலந்து கொண்டு புதிய தடுப்பணையை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.

    ஒளிரும் ஈரோடு அமைப்பு தலைவர் அக்னி சின்னச்சாமி, செயலாளர் எஸ்.கணேசன், பொருளாளர் ஞானவேல், நீர் மேலாண்மை குழு தலைவர் ராபின், துணைத் தலைவர்கள் யூ.ஆர்.சி.தேவராஜ், சி.டி.குமார், அறங்காவலர்கள் பி.வி.மகேஷ், எஸ்.கே.எம்.சிவக்குமார், ஆர்.ஆர்சத்தியமூர்த்தி, காமதேனு மாட்டுத்தீவன நிறுவன தலைவர் ஆர்.ஜி.சுந்தரம், அ.தி.மு.க. பகுதி செயலாளர்கள் சூரம்பட்டி ஜெகதீஷ், காசிபாளையம் கோவிந்தராஜ், சூரம்பட்டி முன்னாள் நகர்மன்றத் தலைவர் சண்முகம், ஒன்றிய செயலாளர் பூவேந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த தடுப்பு அணையின் மேல் பகுதியில் ஏற்கனவே ரூ.10 லட்சம் செலவில் இரண்டு தடுப்பணைகள் தூர்வாரப்பட்டு உள்ளன. மேலும் இதன் கீழ் பகுதியில் 5 தடுப்பணைகள் தூர் வாரப்பட்டுள்ளன.

    விழாவில் ஈரோடு மாவட்ட கலெக்டர் பிரபாகர் கூறியதாவது:-

    தற்போது எனக்கு கிருஷ்ணகிரியில் பணி செய்வதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அங்கும் தொடர்ந்து சிறந்த முறையில் பணியாற்றுவேன். நான் வருகிற வியாழக்கிழமை கிருஷ்ணகிரியில் பொறுப்பேற்க உள்ளேன். ஒளிரும் ஈரோடு அமைப்பு பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

    இதற்கு நானும் ஒரு படிக்கல்லாக இருந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் பணிமாறுதல் பெற்றாலும் ஈரோடு மாவட்டத்திற்கு என்னுடைய ஆதரவு தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும். ஈரோடு மாவட்டத்தில் அடுத்த கட்டமாக நிறைவேற்றப்பட உள்ள திட்டப்பணிகள் குறித்து ஒரு குறிப்பு எழுதி வைத்துள்ளேன்.

    அந்தக் குறிப்பை அடுத்ததாக பதவியேற்க உள்ள மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைக்க உள்ளேன். நாளை மறுநாள் (புதன் கிழமை) புதிய கலெக்டராக பொறுப்பேற்க உள்ள கதிரவனுடன் எனக்கு 15 ஆண்டுகளாக சிறந்த நட்பு உள்ளது. இதை பயன்படுத்தி ஈரோடு மாவட்டத்தில் நிறைவேற்றப்படும் திட்டங்கள் குறித்து எனது ஆலோசனை வழங்க முடியும்.

    இவ்வாறு கலெக்டர் பிரபாகர் கூறினார்.
    Next Story
    ×