search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலம்-சென்னை ரெயில் கொள்ளை: 2 ஆண்டுகளுக்கு பிறகு நாசா புகைப்படங்கள் மூலம் துப்பு துலங்கியது
    X

    சேலம்-சென்னை ரெயில் கொள்ளை: 2 ஆண்டுகளுக்கு பிறகு நாசா புகைப்படங்கள் மூலம் துப்பு துலங்கியது

    சேலம்-சென்னை ரெயில் கொள்ளை தொடர்பாக 2 ஆண்டுகளுக்குப் பிறகு நாசா புகைப்படங்கள் மூலம் துப்பு துலங்கி உள்ளது. #ChennaiTrainRobbery #RBIMoney
    சென்னை:

    சேலம், நாமக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் ரூ.323 கோடி பழைய, கிழிந்த ரூபாய் நோட்டுகளை சேகரித்து ரெயில் மூலம் சென்னை ரிசர்வ் வங்கிக்கு கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 8-ந் தேதி அனுப்பி வைக்கப்பட்டது.

    சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்தில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்ட ரெயில் மறுநாள் அதிகாலை 4.15 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடைந்தது. பின்னர் பணம் இருந்த பெட்டி மட்டும் சேத்துப்பட்டு பணிமனைக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு ரிசர்வ் வங்கி அதிகாரிகள் பெட்டியை திறந்து பார்த்தபோது, மேற்கூரையில் துவாரமிட்டு ரூ.5 கோடியே 78 லட்சத்தை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்தது தெரிந்தது. இந்த கொள்ளை தொடர்பாக சென்னை சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.



    ஓடும் ரெயிலில் கொள்ளையடிக்க வாய்ப்பு இல்லை என்றும், சேலம் ஜங்சன் ரெயில் நிலையம் அல்லது எழும்பூர் ரெயில்நிலையத்தில் தான் கொள்ளையடிக்க வாய்ப்பு உள்ளது என்றும் விசாரணையில் தெரியவந்தது.

    ஓடும் ரெயிலில் ஏறி கொள்ளையடித்தால் கைரேகை பல இடங்களில் பதிவாகி இருக்கும். ஆனால் ரெயில் பெட்டியில் ஒரு சில பகுதிகளில் தான் கைரேகை இருந்தது. இதுதவிர ஓடும் பெட்டியில் ஏறினாலோ, கீழே இறங்கினாலோ கால் தடம் மற்றும் கைரேகைகள் பல இடங்களில் நிச்சயம் பதிந்து இருக்கும். ஆனால் கால் தடம், கை ரேகை பல இடங்களில் இல்லை.

    ஒரு சில கைரேகை மட்டுமே உள்ளதால் வங்கி பணம் ஓடும் ரெயிலில் கொள்ளையடிக்கவில்லை என்றும், ரெயில் நின்று இருக்கும் போது தான் கொள்ளையடிக்கப்பட்டு இருக்கிறது என்றும் தெரிய வந்துள்ளது. ஆனால் கொள்ளையர்கள் குறித்து எந்த துப்பும் கிடைக்கவில்லை.

    இந்நிலையில், 2 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வழக்கில் துப்பு கிடைத்துள்ளது. அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா அளித்த தகவலின் அடிப்படையில், இந்த வழக்கில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சேலத்தில் இருந்து சென்னை வந்த ரயிலின் 350 கி.மீட்டர் தூரத்தை செயற்கை கோள் மூலம் புகைப்படங்களாக நாசா அனுப்பியது. மத்திய உள்துறை அமைச்சகம் மூலமாக நாசாவுக்கு சிபிசிஐடி வைத்த கோரிக்கையை ஏற்று நாசா படங்களை அனுப்பியது.

    நாசா படங்களின் அடிப்படையில் 100-க்கும் மேற்பட்ட செல்போன் டவர்களின் அழைப்புகளில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.  11 பேர் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர்கள் மத்திய பிரதேசம், பீகார் மாநிலங்களை சேர்ந்தவர்கள் என முதல் கட்ட  தகவல் வெளியாகியுள்ளது. #ChennaiTrainRobbery #RBIMoney
    Next Story
    ×