search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் புதிய பஸ்சை கொடியசைத்து தொடங்கி வைத்தபோது எடுத்தபடம்.
    X
    போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் புதிய பஸ்சை கொடியசைத்து தொடங்கி வைத்தபோது எடுத்தபடம்.

    கரூர்-கோவை இடையே புதிய அரசு பஸ் சேவை: அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் தொடங்கிவைத்தார்

    மருத்துவமனைகள்-கல்லூரிகள் முன்பு நின்று செல்லும் வகையில் கரூர்-கோவை இடையே புதிய பஸ்சை கரூரில் இன்று அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். #TNMinister #MRVijayabaskar
    கரூர்:

    தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் சார்பில் கரூரில் இருந்து கோவைக்கு இருக்கை மற்றும் படுக்கை வசதியுடன் கூடிய குளிர்சாதன பஸ் இன்று (திங்கட் கிழமை) முதல் இயக்கப்படுகிறது.

    அந்த பஸ்சினை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று காலை கரூர் பஸ் நிலையத்தில் இருந்து கொடியசைத்து தொடங்கி வைத்தார். தினமும் காலை 6 மணிக்கு கரூரில் இருந்து கோவைக்கும், பின்னர் கோவையில் இருந்து மாலை 5.30 மணிக்கு கரூருக்கும் இயக்கப்பட உள்ளது.

    கரூர் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கோவையில் உள்ள ஆஸ்பத்திரிகள் மற்றும் கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர். அவர்களின் வசதிக்காக தற்போது இயக்கப்படும் பஸ், கரூர்- கோவை இடையே உள்ள ஆஸ்பத்திரிகள், கல்லூரிகள் முன்பு நின்று செல்லும்.

    அதன்படி சூலூர், ராயர்கேர் மருத்துவமனை, கே. எம்.சி.எச்., ஜி.ஆர்.டி. கலைக் கல்லூரி, சி.ஐ.டி. கல்லூரி, ஹோப்ஸ் கல்லூரி, சிங்காநல்லூர் பஸ் நிலையம், கிருஷ்ணம்மாள் கலைக்கல்லூரி, பி.எஸ்.ஜி. மருத்துவ கல்லூரி, குப்புசாமி நாயுடு மருத்துவமனை, கே.சி. ஆஸ்பத்திரி, காந்திபுரம் பஸ் நிலையம், அவினாசி லிங்கம் கல்லூரி, கங்கா மருத்துவமனை ஆகிய இடங்களில் இந்த பஸ் நின்று செல்லும் என அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

    கரூர்-கோவை புதிய பேருந்தானது தினமும் சென்னையில் இருந்து கரூருக்கும் இயக்கப்படுகிறது. எனவே சென்னையில் இருந்து கரூருக்கு காலை வந்ததும், பின்னர் கோவைக்கு இயக்கப்பட உள்ளது. 45 பயணிகள் செல்லக்கூடிய வகையிலான அந்த பஸ்சில், 30 இருக்கைகள் மற்றும் 15 படுக்கை வசதி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    புதிய பஸ் தொடக்க விழாவில் மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ், உதவி கலெக்டர் சரவண மூர்த்தி, அவைத்தலைவர் காளியப்பன், வை.நெடுஞ்செழியன், போக்குவரத்து கழக அதிகாரிகள் கேசவராஜ், ஜூலியஸ் அற்புதராயன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.  #TNMinister #MRVijayabaskar

    Next Story
    ×