search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கல்லூரி மாணவியை கடத்தி 2-வது திருமணம் - பூசாரி போலீசில் சரண்
    X

    கல்லூரி மாணவியை கடத்தி 2-வது திருமணம் - பூசாரி போலீசில் சரண்

    தக்கலையில் பரிகார பூஜைக்கு சென்ற கல்லூரி மாணவியை கடத்தி 2-வது திருமணம் செய்த பூசாரி, போலீசார் தேடி வருவதை அறிந்து சரணடைந்தார்.
    தக்கலை:

    கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியை சேர்ந்த 20 வயதான இளம் பெண் ஒருவர் நாகர்கோவிலில் உள்ள கல்லூரி ஒன்றில் 3-ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார்.

    அவரது தந்தை கூலி தொழிலாளியாக உள்ளார். இந்த நிலையில் அந்த மாணவிக்கு அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்பட்டு வந்தது. டாக்டர்களிடம் சென்று சிகிச்சை அளித்தபோதும் அவர் குணமடையவில்லை.

    இதற்கிடையில் உறவினர்கள் சிலர் கோவில்களுக்கு அழைத்துச் சென்று பரிகார பூஜைகள் செய்தால் மாணவியின் உடல்நலம் சீராகும் என்று கூறினர். இதனால் அவரது தந்தை பல கோவில்களுக்கும் அழைத்துச் சென்று பரிகார பூஜைகள் செய்து வந்தார். அவர்கள் வீடு அருகே உள்ள ஒரு கோவிலுக்கும் மாணவியை அடிக்கடி பரிகார பூஜைக்காக அழைத்துச் சென்றனர்.

    இந்த நிலையில் கடந்த 23-ந்தேதி தனது வீட்டில் இருந்த மாணவி திடீரென்று மாயமாகிவிட்டார். வீட்டு பீரோவில் இருந்த 11 பவுன் நகையும் மாயமாகி இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை தோழிகள் வீடு, உறவினர்கள் வீடு உள்பட பல இடங்களில் தேடியும் அவர் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. அவர் மாயமானது பற்றி கொற்றிக்கோடு போலீசில் தந்தை புகார் செய்தார். அதில் மாயமான தனது மகளை கண்டுபிடித்து தரும்படி கூறியிருந்தார்.

    போலீசாரும் மாயமான மாணவி பற்றி தீவிர விசாரணையில் இறங்கினார்கள். அப்போது அந்த மாணவியை அவரது வீடு அருகே உள்ள கோவிலில் பூஜைகள் செய்யும் பூசாரியே கடத்திச் சென்றது தெரியவந்தது. அவர்கள் இருவரையும் கண்டுபிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். போலீசார் தேடுவதை அறிந்ததும் பூசாரியும், மாணவியும் போலீசில் நேற்று மாலை தஞ்சம் அடைந்தனர்.

    அந்த பூசாரியும் தானும் 3 வருடங்களாக காதலித்து வருவதாகவும், தனது படிப்பு முடியும் நிலையில் பெற்றோர் மாப்பிள்ளை பார்த்ததால் பூசாரியுடன் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டு சித்திரங்கோடு பகுதியில் வசித்து வந்ததாக மாணவி போலீசாரிடம் தெரிவித்தார்.

    பூசாரியிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 3 குழந்தைகள் உள்ளதும், மனைவியை அவர் பிரிந்து வாழ்ந்து வருவதும் தெரியவந்தது. அவர் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதால் அது பற்றி மாணவியிடம் போலீசார் எடுத்துக்கூறி அறிவுரை வழங்கினார்கள். மேலும் அவர்களின் பெற்றோரையும் போலீஸ் நிலையம் வர வழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

    ஆனால் பூசாரியுடன்தான் வாழ்வேன் என்று மாணவி பிடிவாதமாக கூறிவிட்டார். பெற்றோர் அவரை தங்களுடன் வரும்படி கண்ணீருடன் கேட்டுக்கொண்ட போதும் மாணவி தனது முடிவில் உறுதியாக இருந்தார். அவர் மேஜர் என்பதால் அவரை பூசாரியுடன் போலீசார் அனுப்பிவைத்தனர். முறைப்படி திருமணம் செய்து கொண்டு அதை பதிவு செய்து தங்களிடம் காட்ட வேண்டும் என்றும் அவர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள்.
    Next Story
    ×