search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆறுகாட்டுத்துறை கடல் பகுதியில் மீனவர்கள் வலையில் அதிக அளவில் சிக்கும் சீலா மீன்கள்
    X

    ஆறுகாட்டுத்துறை கடல் பகுதியில் மீனவர்கள் வலையில் அதிக அளவில் சிக்கும் சீலா மீன்கள்

    ஆறுகாட்டுத்துறை கடல் பகுதியில் மீனவர்கள் வலையில் அதிக அளவில் சீலா மீன்கள் சிக்குகின்றன. இந்த மீன்களுக்கு நல்ல விலை கிடைப்பதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா ஆறுகாட்டுத்துறையில் 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் இருந்து 300-க்கும் மேற்பட்ட பைபர் படகுகளிலும், 65 விசைப்படகுகளிலும் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நாள்தோறும் அதிகாலையில் பைபர் படகுகளில் மீன்பிடிக்க கடலுக்கு செல்லும் மீனவர்கள் மதியம் கரை திரும்புகின்றனர். விசைப்படகில் செல்லும் மீனவர்கள் ஓரிரு நாட்கள் தங்கி மீன்பிடித்து வருகின்றனர். நாள்தோறும் மீனவர்கள் வலைகளில் ஷீலா, காலா, வாவல், கூரல், நண்டு, இறால் மீன்கள் கிடைக்கின்றன.

    தற்போது ஆறுகாட்டுத்துறை கடல் பகுதியில் மீனவர்கள் வலையில் சீலா மீன்கள் அதிக அளவு சிக்குகின்றன. இதில் ஒரு கிலோ முதல் 3 கிலோ வரை எடையுள்ள சீலா மீன்கள் கிடைக்கின்றன.

    3 கிலோ எடையுள்ள சீலா மீன்கள் கிலோ ரூ.750-க்கும், 2 கிலோ எடையுள்ள சீலா மீன்கள் கிலோ ரூ.500-க்கும், ஒரு கிலோ எடையுள்ள மீன்கள் கிலோ ரூ.350-க்கும் வியாபாரிகள் மீனவர்களிடம் இருந்து வாங்கி செல்கின்றனர். காலா மீன்கள் ரூ.400 முதல் ரூ.500 வரையும், வாவல் மீன்கள் ரூ.500 முதல் ரூ.900 வரையிலும், கூரல் மீன்கள் கிலோ ரூ.400-க்கும் நீலக்கால் நண்டு ரூ.400-க்கும், புள்ளிநண்டு ரூ.250-க்கும் இறால் ரூ.200 முதல் ரூ.500 வரையிலும், மட்லீஸ் கிலோ ரூ.60-க்கும் விற்பனையாகின்றன.

    மீன்கள் அதிகளவில் கிடைப்பதால் மீனவர்கள் ஆர்வத்துடன் அதிகளவில் மீன்பிடிக்க செல்கின்றனர். நாளை(ஞாயிற்றுக்கிழமை) பவுர்ணமி வருகிறது. அதற்கு பிறகு வெளிச்சமாக நேரத்தில் அதிகளவில் கூரல் மீன் சிக்கும் என்பதால் மீனவர்கள் அதிக அளவில் கடலுக்கு செல்ல ஆயத்தமாகி வருகின்றனர். அதிகளவில் ஷீலா மீன்கள் கிடைப்பதாலும், மீன்களுக்கு நல்ல விலை கிடைப்பதாலும் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
    Next Story
    ×