search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கல்லூரி மாணவர் தற்கொலை- மாணவ-மாணவிகள் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு மனு
    X

    கல்லூரி மாணவர் தற்கொலை- மாணவ-மாணவிகள் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு மனு

    மொடக்குறிச்சி அருகே கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து மாணவ-மாணவிகள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

    மொடக்குறிச்சி:

    எழுமாத்தூரில் பாரதியார் பல்கலைக்கழக கலை அறிவியல் கல்லூரி உள்ளது. இங்கு ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த கல்லூரியில் கொடுமுடி நடுப்பாளையம் அருகே உள்ள சாணாம்புதூரை சேர்ந்த தினேஷ்குமார் (வயது 20) என்பவர் கம்ப்யூட்டர் சயின்ஸ் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்லூரியில் மாணவர்கள் 2 பிரிவாக பிரிந்து தகராறில் ஈடுபட்டுள்ளார்கள். இது சம்பந்தமாக தினேஷ்குமார் கல்லூரியில் இருந்து இடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்யப்பட்டுள்ளார். இதனால் மனம் உடைந்து காணப்பட்ட அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுபற்றி அறிந்ததும் கல்லூரி மாணவ-மாணவிகள் ஆத்திரம் அடைந்தனர். வகுப்புகளை புறக்கணித்துவிட்டு வந்து கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.

    ஈரோடு-முத்தூர் ரோட்டில் உள்ள எழுமாத்தூர் பஸ் நிறுத்தம் அருகே ரோட்டில் உட்கார்ந்து சாலை மறியலில் ஈடுபட்டார்கள். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுபற்றிய தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட மாணவ-மாணவிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்கள்.

    தினேஷ்குமார் மீது பொய்யான புகார் கூறி இடைநீக்கம் செய்துள்ளார்கள் என்றும் தினேஷ்குமார் சாவுக்கு காரணமான கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாணவ-மாணவிகள் கூறினர்.

    அவர்களிடம் முழுமையாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என போலீசார் தெரிவித்தனர். இதனால் மாணவர்கள் கலைந்து சென்றனர்.

    இந்த நிலையில் இன்றும் மாணவ-மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரியை புறக்கணித்த அவர்கள் எழுமாத்தூரில் கூடினர். அவர்களை போலீசார் கலைந்து போகச்செய்தனர்.

    இதையடுத்து அவர்கள் 2 வேன்கள் பிடித்து ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்கு புறப்பட்டனர். கலெக்டரிடம் மனு கொடுக்க வந்தனர். அங்கு சென்று கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

    அந்த மனுவில் தினேஷ் குமார் சாவுக்கு காரணமான முதல்வர் மற்றும் 4 பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுத்து அவர்களை சஸ்பெண்டு செய்ய வேண்டும்.

    தினேஷ்குமார் இறுதி சடங்குக்கு சென்ற 10 மாணவர்களை சஸ்பெண்டு செய்துள்ளனர். அந்த சஸ்பெண்டு நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும்.

    எழுமாத்தூரில் இருந்து கல்லூரிக்கு 2 கி.மீ. தூரம் நடந்து செல்ல வேண்டி யுள்ளது. இதனால் கல்லூ ரிக்கு செல்ல தாமதம் ஏற்படுகிறது. ஆனால் பேராசிரியர்கள் அவதூறாக பேசுகிறார்கள் பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் நாங்கள் எங்களது மாற்று சான்றிதழ்களை திரும்ப பெற்றுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் அதில் கூறி உள்ளனர்.

    Next Story
    ×