search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பு.புளியம்பட்டி பகுதியில் நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கல்- போலீசார் அதிரடி விசாரணை
    X

    பு.புளியம்பட்டி பகுதியில் நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கல்- போலீசார் அதிரடி விசாரணை

    பு.புளியம்பட்டி பகுதியில் நாட்டு வெடிகுண்டு கடித்ததில் மாடு பலியான சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் வெடிகுண்டு பதுக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் பு.புளியம்பட்டி அடுத்த பாச்சாமல்லனூரை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் 5 மாடுகளை வளர்த்து வந்தார்.

    இந்த மாடுகள் அப்பகுதியில் தினமும் மேய்ச்சலுக்கு செல்லும். மாடுகள் மேய்வதை பார்க்க சென்ற வெங்கடேசுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு 4 மாடுகள் மட்டும் மேய்ந்து கொண்டிருந்தது. சற்று தூரத்தில் ஒரு மாடு இறந்து கிடந்தது.

    அவர் அதிர்ச்சி அடைந்ததற்கு காரணம் இறந்து கிடந்த மாடு தலை சிதறி இறந்து கிடந்தது. உடனே அவர் இதுகுறித்து பு.புளியம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தலை சிதறி மாடு இறந்து கிடக்கிறதா? என்ற அதிர்ச்சி கலந்த குழப்பத்தில் புஞ்சை புளியம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு ஆஜர் ஆனார்கள். இறந்து கிடந்த மாட்டை ஆய்வு செய்தபோது அது நாட்டு வெடிகுண்டை கடித்ததால் தலை சிதறி இறந்து கிடந்தது தெரிய வந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. குடியிருப்பு பகுதியில் எப்படி நாட்டு வெடிகுண்டு வந்தது? இங்கு கொண்டு போட்டு சென்றது யார்? என்று போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

    சம்பவம் நடந்த பகுதியில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் விளாமுண்டி வனப்பகுதி உள்ளது. இங்கு சில மர்ம ஆசாமிகள் வனவிலங்குகளை வேட்டையாடி வருகிறார்கள். வனத்துறையினர் இந்த வேட்டை கும்பலை கண்காணித்து வந்தாலும் அந்த கும்பல் அவர்களையும் ஏமாற்றி முயல், மான், உடும்பு போன்ற வனவிலங்குகளை வேட்டையாடி செல்கிறார்கள்.

    மேலும் இவர்கள் காட்டுக்குள் சென்று வனவிலங்குகளை வேட்டையாடினால் வனத்துறையினரிடம் மாட்டிக் கொள்வோம் என எண்ணி விலங்குகள் தண்ணீர் மட்டும் இரை தேடி வெளியே வரும் தடத்தில் ஒதுக்குப்புறமான பகுதியில் நாட்டு வெடிகுண்டை வைத்து விடுகிறார்கள். இந்த நாட்டு வெடிகுண்டை ஏதோ ஒரு உணவு என கருதி அந்த விலங்கு கடிக்க உடனே அது வெடித்து விலங்கும் இறந்து விடுகிறது. அதன் பிறகு இறந்த விலங்கை வேட்டை கும்பல் எடுத்து சென்று விடும்.

    அப்படிதான் மர்ம ஆசாமிகள் இந்த நாட்டு வெடிகுண்டை வைத்து உள்ளனர். இதை அறியாத வாயில்லா ஜீவனான மாடு கடிக்க அது தலை சிதறி இறந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    இந்த சம்பவத்தை பார்க்கும்போது அந்த பகுதியில்தான் நாட்டு வெடிகுண்டுகளை முக்கிய புள்ளிகள் பதுக்கி வைத்திருக்க கூடும் என தெரிகிறது.

    அந்த முக்கிய புள்ளிகள் யார்? பிடிக்க புளியம்பட்டி போலீசார் வலை விரித்துள்ளனர்.
    Next Story
    ×