search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ‘மெட்ராஸ் டே’ என்று சொன்னாலும், அது சென்னை தினம்தான் - மு.க.ஸ்டாலின் அறிக்கை
    X

    ‘மெட்ராஸ் டே’ என்று சொன்னாலும், அது சென்னை தினம்தான் - மு.க.ஸ்டாலின் அறிக்கை

    ‘மெட்ராஸ் டே’ என்று சொன்னாலும், அது சென்னை தினம் தான், கருணாநிதியின் நினைவுகளை போற்றி மகிழ்வோம் என்று மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார். #MadrasDay #ChennaiDay #MKStalin
    சென்னை:

    ‘மெட்ராஸ் டே’ என்று சொன்னாலும், அது சென்னை தினம் தான், கருணாநிதியின் நினைவுகளை போற்றி மகிழ்வோம் என்று மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

    இதுகுறித்து தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-



    ஆண்டுதோறும் ஆகஸ்டு 22-ந் தேதியான இன்று (புதன்கிழமை) சென்னை தினமாக (மெட்ராஸ் டே) கடைப்பிடிக்கிறார்கள். பிரிட்டிஷாரின் கிழக்கிந்திய கம்பெனி, சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை இடம் தொடர்பாக 1639-ம் ஆண்டு ஆகஸ்டு 22-ந் தேதி ஒப்பந்தம் செய்து கொண்டதன் நினைவாக இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

    சென்னை என்பது பிரிட்டிஷார் இங்கு வருவதற்கு முன்பே சிறந்து விளங்கிய நெய்தல் நிலம். மீனவர்கள் உள்ளிட்ட உழைக்கும் மக்களுக்கு வாழ்வுரிமை அளித்த மண். இத்தகைய பெருமை மிகுந்த சென்னையை தலைநகராக்கினார்கள் ஆங்கிலேயர்கள்.

    சென்னை மாகாணம் (மெட்ராஸ் ஸ்டேட்) என்பதை ‘தமிழ்நாடு’ என்று மாற்றி பெயர் சூட்டிப் பெருமை சேர்த்தார், தி.மு.க.வின் முதல் முதல்-அமைச்சரான அண்ணா, தலைநகர் சென்னையில் இரண்டாம் உலகத்தமிழ் மாநாட்டை நடத்தினார். அத்துடன், மெரினா கடற்கரையில் தமிழ்ச் சான்றோர்களுக்கு சிலை அமைத்து தமிழ்-தமிழர்களின் பெருமையை சென்னை வாயிலாக உலகம் முழுவதும் அறியச் செய்தார்.

    அவரை தொடர்ந்து, முதல்-அமைச்சர் பொறுப்பை ஏற்று, தமிழ்நாட்டில் 5 முறை முதல்-அமைச்சராக அதிக காலமான 19 ஆண்டுகள் ஆட்சி செய்தவரான கருணாநிதி, சென்னை என தமிழிலும், மெட்ராஸ் என ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழிகளிலும் அழைக்கப்பட்டு வந்த நிலையை மாற்றி, ‘சென்னை’ என அனைத்து மொழிகளும் ஏற்றுப் பயன்படுத்திடும் வகையில், பெயர் மாற்றம் செய்து வரலாறு படைத்தார்.

    திராவிட இயக்க வரலாற்றில் சென்னை மாநகரம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. திராவிடர் சங்கம், நீதிக்கட்சி ஆகியவை தொடங்கப்பட்ட மாநகரம் இது. முதல் இந்தி எதிர்ப்பு போரில் (1938) சென்னையில் பெரும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. நடராசன், தாளமுத்து ஆகியோர் சிறைப்பட்டு உயிரிழந்தது சென்னையில் தான். அண்ணா முதன் முதலில் சிறை கண்டதும் சென்னையில் தான். திராவிட அரசியல் பேரியக்கமான தி.மு.க.வை அவர் தொடங்கியதும் இதே சென்னையில் தான்.

    அவர் வழியில் வந்த கருணாநிதி, அண்ணா நகர், அண்ணா சதுக்கம், வள்ளுவர் கோட்டம், அண்ணா நூற்றாண்டு நூலகம், அண்ணா மேம்பாலம், டைடல் பூங்கா, செம்மொழிப் பூங்கா, தமிழ் இணையப் பல்கலைக்கழகம் என காலத்திற்கேற்ற நவீனமான வளர்ச்சியுடன் கூடிய வரலாற்று சிறப்புமிக்க அடையாளங்களை உருவாக்கினார்.

    கருணாநிதியால் சென்னை மாநகர மேயர் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பைப் பெற்ற நான், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சென்னையின் முதல் மேயர் என்ற பெயரினைப் பெறும் நல்வாய்ப்பு அமைந்தது. அந்த நல்வாய்ப்பில்தான் சென்னையின் புதுயுக அடையாளங்களாக விளங்கும் மேம்பாலங்கள், கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டன.

    மாநகராட்சி பள்ளிகளில் கணினி வசதிகள் கொண்டுவரப்பட்டன. சென்னையின் முகமும், முகவரியும் புதுமையான வலிவும், பொலிவும் பெற்றன. வரலாற்றின் அந்த பொன்னேடுகளை நினைவுகூர்ந்து, சென்னை தினத்தை கடைப்பிடிப்போம். ‘மெட்ராஸ் டே’ என்று சொன்னாலும், அது சென்னை தினம்தான். அதன் பின்னணியில் மிளிரும் கருணாநிதியின் நினைவுகளை என்றும் போற்றி மகிழ்வோம்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.  #MadrasDay #ChennaiDay #MKStalin
    Next Story
    ×