search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரம்பலூர் அருகே மினிபஸ்சின் சக்கரத்தில் சிக்கி கணவர் கண்முன்னே மனைவி பலி
    X

    பெரம்பலூர் அருகே மினிபஸ்சின் சக்கரத்தில் சிக்கி கணவர் கண்முன்னே மனைவி பலி

    பெரம்பலூர் அருகே மினிபஸ்சின் சக்கரத்தில் சிக்கி கணவர் கண்முன்னே மனைவி உடல் நசுங்கி உயிரிழந்தார்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் அருகே மினிபஸ்சின் சக்கரத்தில் சிக்கி கணவர் கண்முன்னே மனைவி உடல் நசுங்கி உயிரிழந்தார். விபத்தில் பலியான குடும்பத்தினருக்கு நஷ்டஈடு வழங்கக்கோரி உறவினர்கள் உயிரிழந்த பெண்ணின் உடலை சாலை யில் வைத்து மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    பெரம்பலூர் அருகே மேலப்புலியூர் கிராமத்தை சேர்ந்தவர் ரெங்கராஜ். விவசாயி. இவர் நேற்று காலையில் தனது மனைவி சுசீலாவை (வயது 42) மோட்டார் சைக்கிளில் அழைத்து கொண்டு பெரம்பலூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்கள் நாவலூர் சாலையில் சென்று கொண்டிருந்தனர். அந்த சாலையில் தார்ச்சாலை அமைக்கும் பணிக்காக ஜல்லிக்கற்கள் போடப்பட்டிருந்ததால் மோட்டார் சைக்கிளை ரெங்கராஜ் மெதுவாக ஓட்டி சென்றார். இந்நிலையில் எதிரே பெரம்பலூரில் இருந்து மேலப்புலியூர் கிராமத்திற்கு மினி பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து ரெங்கராஜ் இடதுபுறமாகவும், சுசீலா வலதுப்புறமாகவும் கீழே விழுந்தனர். இந்நிலையில் சுசீலா மினிபஸ்சின் வலதுப்புற பின்பக்க சக்கரத்தில் சிக்கி கொண்டார். இதனை சற்றும் கவனிக்காத டிரைவர் மினி பஸ்சை இயக்கினார். இதில் பஸ்சின் சக்கரம் சுசீலாவின் மீது ஏறி இறங்கியது. இதில் படுகாயமடைந்த சுசீலா சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் துடி துடித்து தனது கணவர் கண்முன்னே பரிதாபமாக உயிரிழந்தார். ரெங்கராஜ் தனது மனைவியின் உடலை பார்த்து கதறி அழுதார். இதனை கண்ட அதிர்ச்சியடைந்த அந்த வழியாக சென்றவர்கள், அந்தப்பகுதி பொதுமக்கள் ஆத்திரத்தில் மினிபஸ்சை அடித்து நொறுக்கினர். இதில் மினிபஸ்சின் கண்ணாடிகள், இருக்கைகள் சேதமடைந்தன. அப்போது மினிபஸ்சின் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து தகவலறிந்து ரெங்கராஜின் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    அவர்கள் விபத்தை ஏற்படுத்திய மினிபஸ்சின் டிரைவரை கைது செய்யக்கோரியும், விபத்தில் உயிரிழந்த சுசீலாவின் குடும்பத்தினருக்கு தனியார் மினிபஸ் நிர்வாகத்தினர் நஷ்டஈடு வழங்கக்கோரியும் மினிபஸ்சை சிறைபிடித்து, சுசீலாவின் உடலை சாலையில் வைத்து மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அந்தப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார் மினிபஸ்சின் டிரைவர் குரும்பலூரை சேர்ந்த கண்ணன் மகன் பிரசாந்தை(24) கைது செய்து விட்டதாகவும், நஷ்டஈடு பெற்று தர நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் காலை 11 மணிக்கு தொடங்கிய மறியலை சுசீலாவின் உறவினர்கள் மதியம் 2.30 மணியளவில் கைவிட்டனர். பின்னர் போலீசார் சுசீலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு தலைமை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் உயிரிழந்த சுசீலாவிற்கு 2 மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
    Next Story
    ×