search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பூரில் இருந்து கேரளாவுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு
    X

    திருப்பூரில் இருந்து கேரளாவுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு

    திருப்பூரில் இருந்து கேரளாவுக்கு நிவாரணப்பொருட்களை கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமையில் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் அனுப்பி வைத்தார். #keralarain

    திருப்பூர்:

    திருப்பூர், பல்லடம் சாலையில் அமைந்துள்ள ராமசாமி முத்தம்மாள் திருமண மண்டபத்திலிருந்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக சேகரிக்கப்பட்ட நிவாரணப்பொருட்களை கலெக்டர் டாக்டர்.கே.எஸ்.பழனிசாமி தலைமையில் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் அனுப்பி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது,

    திருப்பூர் மாவட்டத்திலிருந்து சேகரிக்கப்பட்ட ரூ.50 லட்சம் மதிப்பிலான நிவாரணப்பொருட்களை கேரளா மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதல் கட்டமாக அனுப்பி வைக்கப்படுகிறது. பொதுமக்களுக்கு தேவையான 1435 கிலோ அரிசி, 60 பெட்டி தண்ணீர் பாட்டில்கள், 50 கிலோ துவரம்பருப்பு, உயிர்காக்கும் மருந்துகள் ,பால் பவுடர், பற்பசை, போர்வைகள், சானிட்டரி நாப்கின்கள், பிஸ்கட்டுகள் மற்றும் பாக்குமட்டையிலான தட்டுக்கள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் போர்கால அடிப்படையில் அனுப்பி வைக்கப்படுகிறது.

    மேலும், காங்கயம் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மூலம் ரூ.5 லட்சம் மதிப்புள்ள தேங்காய் எண்ணெய் பாக்கெட்டுகள் மற்றும் திருப்பூர் மாவட்ட ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் மூலமாக டீ-சர்ட்டுகள் மற்றும் ஆடைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் கோவை மாவட்டத்திலிருந்து கேரளா மாநிலத்தில் உள்ள கால்நடைகளுக்கு முதற்தட்டமாக ரூ.10 லட்சம் மதிப்பிலான தடுப்பூசிகள், தீவனம் மற்றும் சத்து மருந்துகள் அனுப்பிவைக்கப்படுகிறது.

    திருப்பூர் மாவட்டத் திலுள்ள பொதுமக்கள் அதிகளவில் கேரளா மாநிலத்திற்கு நிவாரணப் பொருட்கள் வழங்கு வதற்கு முன்வந்து பல்லடம் சாலையில் அமைந்துள்ள ராமசாமி முத்தம் மாள் திருமண மண்டபத்தில் மாவட்ட நிர்வாகத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ள நிவாரணப் பொருட்கள் சேகரிப்பு மையத்தில் வழங்கி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முன்வர வேண்டும்.

    மேலும், திருப்பூர் மாவட்டத்தின் மூலமாக ரூ.1 கோடி மதிப்பிலான நிவாரணப்பொருட்கள் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு அதன் ஒரு பகுதியாக ரூ.50 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் போது சட்டமன்ற உறுப்பினர்கள் சு.குணசேகரன் (திருப்பூர் தெற்கு), கரைப்புதூர் நடராஜன்(பல்லடம்), மாநகர காவல் துணை ஆணையர் உமா, மாவட்ட வருவாய் அலுவலர்பிரசன்னா ராமசாமி, முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், திருப்பூர் சப்- கலெக்டர் ஷ்வரன் குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, திட்ட இயக்குநர் ரமேஷ்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்.எஸ்.என்.நடராஜன், உடுமலைபேட்டை வருவாய் கோட்டாட்சியர் அசோகன் மற்றும் துணை கலெக்டர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். #keralarain

    Next Story
    ×