search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாலக்கோடு பகுதியில் அணைகள் - ஏரிகள் வறண்டதால் கரும்பு, நிலக்கடலை மகசூல் பாதிப்பு
    X

    பாலக்கோடு பகுதியில் அணைகள் - ஏரிகள் வறண்டதால் கரும்பு, நிலக்கடலை மகசூல் பாதிப்பு

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் அணைகள், ஏரிகள் வறண்டதால் குடிநீர் தட்டுப்பாடு மற்றும் கடும் வறட்சி நிலவி போதிய தண்ணீரின்றி கரும்பு, நிலக்கடலை பயிர்கள் காய்ந்து வருகின்றன.
    பாலக்கோடு:

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் அணைகள், ஏரிகள் வறண்டதால் குடிநீர் தட்டுப்பாடு மற்றும் கடும் வறட்சி நிலவி போதிய தண்ணீரின்றி கரும்பு, நிலக்கடலை பயிர்கள் காய்ந்து வருகின்றன.

    நடப்பு ஆண்டில் பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை மூலம் சுமார் 2 லட்சம் மெட்ரிக் டன் அளவிற்கு அரவை நிர்ணயித்து கரும்பு நடவு செய்யப்பட்டு உள்ளது.

    தற்போது மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவி வருவதாலும், பஞ்சப்பள்ளி சின்னாறு அணை, தும்பல அள்ளி அணை, மற்றும் பொதுப்பணித்துறை ஏரிகள் முற்றிலும் வறண்டு இருப்பதால் ஆற்றுப்பாசனம் மற்றும் நிலத்தடிநீர் பாசனம் போதிய தண்ணீரின்றியும், நிலத்தடிநீர் ஆயிரம் அடிக்குகீழ் சென்றதாலும் கரும்பு, நிலக்கடலை, காய்கறி பயிர்கள் காய்ந்து வருகின்றன.

    கரும்பு அருவடைக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் கரும்பு காய்ந்ததால் வெல்லம் தயாரிக்க விவசாயிகள் கரும்பை வெட்டி வருகின்றனர். இதற்கு அரசு அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் விவசாயிகள் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.

    ஒகேனக்கலில் சுமார் 2 லட்சம் கனஅடி வரை தண்ணீர் கரைபுரண்டு ஓடுகின்றது. தருமபுரி மாவட்டத்தில் ஓடும் காவிரி ஆற்றால் தருமபுரி, பாலக்கோடு பகுதி பொதுமக்களுக்கு எந்த ஒரு பயனும் கிடைப்பதில்லை.

    மேலும், குடிநீருக்காக ஒகேனக்கல்லில் இருந்து ராட்சத மோட்டர்கள் மூலம் தருமபுரி, பாலக்கோடு பகுதிகளுக்கு குடிநீர் குழாய் மூலம் தண்ணீர் வினியோகிக்கப்பட்டு வருகின்றது.

    தற்போது வரும் உபரிநீரை ஒகேனக்கல் குடிநீர் குழாய் மூலம் மாவட்டத்தில் உள்ள பொதுப்பணிதுறை ஏரிகள், அணைகள் என தண்ணீரை நிறப்பினால் நிலத்தடிநீர் மட்டம் உயரும், குடிநீர் தட்டுபாடு குறையும், விவசாயம் செழிக்கும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மேலும், கூடுதலாக ஒருசில மின்மோட்டர்கள் பொருத்தினால் பொதுப்பணித் துறை ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்பலாம் எனவும் கூறுகின்றனர்.

    எனவே, பொதுப் பணித் துறை ஏரிகளில் தண்ணீரை நிரப்ப பரிசீலனை செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும், வறட்சியால் கரும்பு பயிர்கள் காய்ந்து வருவதால் உடனடியாக கூட்டுறவு சர்க்கரை ஆலையின் மூலம் கரும்பை வெட்டவும், காய்ந்த கரும்பிற்கு இழப்பீடு வழங்கவும், கரும்பு பயிருக்காக வாங்கிய கடனை தள்ளுபடி செய்யவும் தமிழக அரசு முன்வர வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×