search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குன்னூர் உழவர்சந்தை அருகே குப்பை கிடங்கு அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
    X

    குன்னூர் உழவர்சந்தை அருகே குப்பை கிடங்கு அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

    குன்னூர் உழவர்சந்தை அருகே குப்பை கிடங்கு அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    குன்னூர்:

    குன்னூர் நகர பகுதியான 8-வது வார்டில் உழவர் சந்தை இயங்கி வருகிறது. இதன் அருகே நகராட்சி டவுன் சோலா மைதானம் உள்ளது. இங்கு கடந்த காலத்தில் பூங்கா அமைக்கப்பட்டிருந்தது. அது காலப்போக்கில் முட்புதர்கள் வளர்ந்து காடுகளாக மாறியது.

    விளையாட்டு மைதானத்தில் சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் பல்வேறு விளையாட்டுகளை விளையாடி வருகின்றனர். இந்த மைதானத்தில் ஒரு பகுதியில் குடிநீர் கிணறு உள்ளது.

    இந்த குடிநீர் கிணற்றில் இருந்து அருகில் உள்ள காமராஜபுரம், ராக்பி, ரேலி காம்பவுண்ட், எல்.ஐ.சி. காலனி, முனிசிபால் லைன், பழைய ஆஸ்பத்திரி லைன், ராஜாஜி நகர் மற்றும் ஹேர்வுட் பகுதிகளுக்கு விணியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இப்பகுதிகளில் சுமார் 5000-க்கு மேற்ப்பட்ட குடியிருப்புகளும் தோட்ட தொழிலாளர்களின் தலைமை அலுவலக வங்கியும் செயல்பட்டு வருகிறது.

    தனியார் தங்கும் விடுதி, உழவர் சந்தை, பொது மக்களின் கூட்டுறவு மண்எண்ணை பங்க், மேலும் பள்ளி கூடங்கள், தனியார் மருத்துவமணை, கோவில்கள், சர்ச்சுகள், குறிப்பாக நீலகிரி பாராளுமன்ற உறுப்பினரின் அலுவலகமும் உள்ளது.

    இதனை கண்டு கொள்ளாத குன்னூர் நகராட்சி அதிகாரிகள் உழவர் சந்தை அருகில் உள்ள விளையாட்டு மைதானத்தில் குப்பை கிடங்கு அமைக்க பணிகள் நடைபெற்று வருவதால் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளில் பொதுமக்களுக்கும், குழந்தைகளுக்கும் தொற்று நோய் பரவும் சூழ்நிலையும், சிறிய வகை பூச்சிகளும், புழுக்களும், ஈ, கொசுகளும் உண்டாகி பொதுமக்களை அச்சுறுத்தி நோய்களை ஏற்படுத்தும் என்றும் இதனை நகராட்சி நிறுத்தி வேறு இடத்திற்கு மாற்ற கோரி அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொது மக்கள் ரேலி காம்பவுண்ட்டில் உள்ள கேரள சமாஜம் கலை அரங்கில் கூட்டத்தை நடத்தினர்.

    இதில் இந்த குப்பை கிடங்கை நகராட்சி உடனே நிறுத்தி வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் அனைத்து மக்களும் குன்னூர் ஆணையர் மற்றும் மாவட்ட கலெக்டரிடம் மனுவை கொடுத்து அந்த பணிகளை வேறு இடத்திற்கு மாற்ற கோரிக்கை வைப்பதென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இதில் ஏராளமான பெண்களும் சமூக ஆர்வலர்களும் மருத்துவர்களும் வக்கீல்களும் கலந்து கொண்டனர்.

    இந்த குப்பை கிடங்கை மாற்றும் வரை மக்கள் பல்வேறு விதத்தில் கண்டனம் தெரிவித்து போராட்டங்களை நடத்த முடிவு செய்துள்ளனர்.

    Next Story
    ×