search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலத்தில் அடுத்தடுத்து விபத்து- லேப்-டெக்னீசியன் உள்பட 3 பேர் பலி
    X

    சேலத்தில் அடுத்தடுத்து விபத்து- லேப்-டெக்னீசியன் உள்பட 3 பேர் பலி

    சேலத்தில் ஒரே நாளில் தொடர்ந்து அடுத்தடுத்து நடந்த விபத்து சம்பவங்களில் லேப்-டெக்னீசியன் உள்பட 3 பேர் பலி பலியாகி உள்ளனர்.
    சேலம்:

    சேலம், கருப்பூர் அருகே உள்ள மூங்கில்பாடியை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் பெரியண்ணன் (வயது 21) கிரானைட் கல் அறுக்கும் ஆபரேட்டர் வேலை செய்து வந்தார்.

    இவரும், ரெட்டியூரை சேர்ந்த தங்கவேல் மகன் ரஞ்சித் குமார்(20) என்பவரும் நண்பர்கள் ஆவார்கள். நேற்று இரவு 2 பேரும் மோட்டார் சைக்கிளில் மாமாங்கத்திற்கு சென்று மது குடித்ததாக கூறப்படுகிறது. பின்னர் போதை தலைக்கேறிய நிலையில் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பினர்.

    அப்போது பெரியண்ணன் மோட்டார் சைக்கிளை ஓட்டினார். பின்னால் ரஞ்சித்குமார் அமர்ந்திருந்தார். இருவரும் அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

    ஜாகீர்ரெட்டிப்பட்டி அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியின் எதிரே வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த வேகத்தடையை கவனிக்காமல் பெரியண்ணன் அதில் வேகமாக மோட்டார் சைக்கிளை ஓட்டினார். இதில் ஏறி, இறங்கிய மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சென்று அங்கிருந்த சுவரில் பயங்கரமாக மோதியது.

    இதில் பெரியண்ணனின் தலை சுவரில் அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ரஞ்சித்குமாருக்கு கை எலும்பு உடைந்தது.அவரை போலீசார் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    வேலூர் மாவட்டம் ஆம்பூர், பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் பாபு. இவரது மகன் பிரகாஷ்ராஜ் (வயது 27). லேப்-டெக்கினீக்கல் படித்துள்ளார்.

    இவர் ஜாகீர்ரெட்டிப் பட்டியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்து சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் லேப்-டெக்னீசியனாக பணியாற்றி வந்தார்.

    நேற்று இவருக்கு இரவு பணி ஒதுக்கப்பட்டது.இதனால் பிரகாஷ்ராஜ் ஜாகீர்ரெட்டிபட்டியில் இருந்து புறப்பட்டு மோட்டார் சைக்கிளில் ஆஸ்பத்திரிக்கு சென்று கொண்டிருந்தார். நள்ளிரவு 12 மணிக்கு வெண்ணங்குடி முனியப்பன் கோவில் அருகே மெயின்ரோட்டில் வந்தபோது, அவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் பயங்கரமாக மோதியது.

    இதில் பிரகாஷ்ராஜ் சாலையில் உள்ள மின் கம்பத்தில் தூக்கி வீசப்பட்டார். இதில் தலை மின்கம்பத்தில் வேகமாக மோதியதில் தலை உடைந்து, சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்தை ஏற்படுத்திய வாகனம் அங்கு நிற்காமல் தப்பி சென்று விட்டது. இந்த வாகனம் குறித்து சோதனை சாவடியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை கொண்டு கண்டுபிடிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    நேற்று இரவு மாமாங்கம் மெயின் ரோட்டில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் ஒருவர் நடந்து சென்றார். அவர் ரோட்டை கடக்க முயன்றார். அப்போது அவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் அவர் தலை, முகம், உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து தெரியவில்லை.

    ஒரே நாளில் தொடர்ந்து அடுத்தடுத்து நடந்த இந்த விபத்து சம்பவங்கள் குறித்து சூரமங்கலம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் கேசவன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். #tamilnews
    Next Story
    ×