search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கல்லூரிகளில் செல்போனுக்கு தடை - தமிழக கல்வித்துறை நடவடிக்கை
    X

    கல்லூரிகளில் செல்போனுக்கு தடை - தமிழக கல்வித்துறை நடவடிக்கை

    தமிழகத்தில் கல்லூரிகளில் மாணவ-மாணவிகள் செல்போன் பயன்படுத்த தடை விதித்து கல்லூரி கல்வித்துறை இயக்குனரகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
    சென்னை:

    கல்லூரியில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு ஆடை கட்டுப்பாடு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் இருக்கிறது. சில கல்லூரிகள் இந்த கட்டுப்பாடுகளை கடுமையாக பின்பற்றி வருகின்றன.

    இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்பட அனைத்து கல்லூரிகளிலும் மாணவ-மாணவிகள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. கல்லூரி கல்வித்துறை இயக்குனரகம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

    செல்போனால் மாணவ- மாணவிகளின் கவனம் சிதறுகிறது. இதை தடுக்க இந்த முடிவை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. ஏற்கனவே பள்ளிகளில் செல்போனுக்கு தடை இருக்கிறது. தற்போது கல்லூரி வளாகத்தில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்த மாதம் தொடக்கத்தில் கல்லூரி கல்வித்துறை இயக்குனர் சாருமதி இதற்கான உத்தரவை அனைத்து மண்டல கல்வித்துறை இணை இயக்குனர்களுக்கு பிறப்பித்துள்ளார். அவர்கள் மூலம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள், தனியார் கல்லூரி நிறுவனங்களுக்கு இந்த உத்தரவு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    உயர் கல்வித்துறை செயலாளர் (பொறுப்பு), பள்ளி கல்வித்துறை செயலாளர், உயர்கல்வித்துறை பொறுப்பாளர் ஆகியோர் தலைமையில் சமீபத்தில் நடந்த கூட்டத்தில் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது.

    இது குறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    மாணவ-மாணவிகள் இணைந்து படிக்கும் கல்லூரிகளில் இருந்து பல்வேறு புகார்கள் வருகின்றன. மாணவர்கள் தங்களது செல்போன் மூலம் மாணவிகளை வீடியோ எடுப்பதாகவும், புகைப்படம் எடுப்பதாகவும் குற்றச்சாட்டுகள் கூறப்படுகிறது.

    மேலும் பரீட்சையின் போது செல்போனை பயன்படுத்தி முறைகேடுகள் நடக்கிறது. செல்போனால் மாணவ-மாணவிகளின் கவனம் சிதறுகிறது. இதன் காரணமாக கல்லூரிகளில் செல்போனை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்த கட்டுப்பாட்டை பின்பற்றி மாணவ-மாணவிகள் கல்லூரிகளுக்கு செல்போன்களை கொண்டுவர மாட்டார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    2005-ம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழகம் இந்த கட்டுப்பாட்டை கொண்டு வந்தது. வகுப்பறையில் செல்போன் பயன்படுத்த கட்டுப்பாடு இருந்ததால் மாணவ- மாணவிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து இந்த கட்டுப்பாடு நாளடைவில் தளர்த்தப்பட்டது.

    தற்போது தமிழ்நாடு முழுவதும் அனைத்து கல்லூரிகளிலும் செல்போனுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது
    Next Story
    ×