search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கந்தர்வகோட்டை அருகே 2 வீடுகளில் பின்பக்க கதவை உடைத்து பணம்- துணிகள் கொள்ளை
    X

    கந்தர்வகோட்டை அருகே 2 வீடுகளில் பின்பக்க கதவை உடைத்து பணம்- துணிகள் கொள்ளை

    கந்தர்வகோட்டை அருகே 2 வீடுகளில் பின்பக்க கதவை உடைத்து உள்ள புகுந்த மர்ம நபர்கள் பணம் மற்றும் துணிகளை கொள்ளையடித்து சென்றனர்.
    கந்தர்வகோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள பிசானத்தூர் கோட்டை தெருவை சேர்ந்தவர் ராமதாஸ்(வயது 65). இவருடைய வீட்டில், அதே பகுதியில் உள்ள திரவுபதியம்மன் கோவிலுக்கு சொந்தமான 30 பவுன் நகைகள் உள்ளன. தற்போது ராமதாஸ் சென்னையில் வசித்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ராமதாஸ் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் நகைகள் இருந்த பெட்டகத்தை உடைக்க முயற்சி செய்தனர். ஆனால் அவர்களால் பெட்டகத்தை உடைக்க முடியவில்லை. இதனால் பெட்டகத்தில் இருந்த கோவிலுக்கு சொந்தமான 30 பவுன் நகைகள் தப்பியது.

    இதையடுத்து மர்மநபர்கள், ராமதாஸ் வீட்டின் அருகே உள்ள சின்னையன் என்பவருடைய வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கு வீட்டில் இருந்த ரூ.5 ஆயிரத்து 500-ஐ எடுத்து கொண்ட அவர்கள், வீட்டில் இருந்த பீரோவை வெளியே தூக்கி வந்து, பீரோவை உடைத்து பார்த்தனர். ஆனால் பீரோவில் பணம் இல்லை. இதனால் பீரோவில் இருந்து துணிகளை வெளியே தூக்கி வீசியுள்ளனர்.

    பின்னர் மர்மநபர்கள் அதே பகுதியில் உள்ள கோவிந்தராஜ் என்பவருடைய வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கு வீட்டில் இருந்த பீரோவை உடைத்து, அதில் இருந்த துணிகளை எடுத்து சென்றனர். இந்த கொள்ளை சம்பவங்களின்போது சின்னையன், கோவிந்தராஜ் ஆகியோர் குடும்பத்துடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த சம்பவங்கள் குறித்த புகாரின் பேரில் கந்தர்வகோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
    Next Story
    ×