search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரூ.148 கோடியே 45 லட்சம் மதிப்பில் குடியிருப்புகள், பாலங்களை எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்
    X

    ரூ.148 கோடியே 45 லட்சம் மதிப்பில் குடியிருப்புகள், பாலங்களை எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்

    ரூ.148 கோடியே 45 லட்சம் மதிப்பிலான குடியிருப்புகள், பாலங்கள் உள்ளிட்டவற்றை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார். #TamilNaduCM #EdappadiPalanisamy
    சென்னை:

    ரூ.148 கோடியே 45 லட்சம் மதிப்பிலான குடியிருப்புகள், பாலங்கள் உள்ளிட்டவற்றை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார். மேலும் 95 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு பணிநியமன ஆணைகளையும் வழங்கினார்.

    பொதுப்பணித் துறையின்கீழ் செயல்படும் நீர்வள ஆதாரத் துறையின் சார்பில் ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன் காவிரி கழிமுகப் பகுதியில் பருவநிலை மாறுதல்களை தழுவல் திட்டத்தின் கீழ், திருவாரூரில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட திட்ட செயலாக்க அலுவலக கட்டிடத்தை காணொலிக் காட்சி மூலமாக சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.

    நாகப்பட்டினத்தில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள திட்ட செயலாக்க அலுவலக கட்டிடத்தை திறந்துவைத்து, இத்திட்டப்பணிக்காக பொறியாளர்களுக்கு ரூ.1 கோடியே 12 லட்சம் மதிப்பீட்டில் ஒரு கார் மற்றும் 16 ஜீப்புகளையும் வழங்கினார். மேலும் பொதுப்பணித் துறையில் 95 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளையும் வழங்கினார்.

    தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மூலம் திருவள்ளூர் மாவட்டம், பாடிக்குப்பம் திட்டப்பகுதியில், தமிழ்நாடு அரசின் சி‘ மற்றும் டி‘ பிரிவு ஊழியர்களுக்காக சுயநிதி திட்டத்தின்கீழ் ரூ.69 கோடியே 57 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 236 குறைந்த வருவாய் பிரிவு அடுக்குமாடி குடியிருப்புகளை காணொலிக் காட்சி மூலமாக திறந்துவைத்தார்.

    வீட்டுவசதி வாரியம் மற்றும் குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் சார்பில் ரூ.70 கோடியே 6 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 602 அடுக்குமாடி குடியிருப்புகளையும் திறந்துவைத்தார்.

    ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் ஒன்றியம், நடேசன் கொட்டாய் சவுளுக்கொட்டாய் சாலையில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலத்தையும், காஞ்சீபுரம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ரூ.3 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2 உயர்மட்ட பாலங்கள் மற்றும் ஒரு பாலத்தையும் திறந்துவைத்தார்.

    மொத்தம் ரூ.148 கோடியே 48 லட்சம் மதிப்பில் கட்டிடங்கள், குடியிருப்புகள் மற்றும் பாலங்களை எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். 
    Next Story
    ×