search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூத்துக்குடியில் சுதந்திர தினவிழா கொண்டாட்டம் - கலெக்டர் சந்தீப் நந்தூரி தேசிய கொடியேற்றினார்
    X

    தூத்துக்குடியில் சுதந்திர தினவிழா கொண்டாட்டம் - கலெக்டர் சந்தீப் நந்தூரி தேசிய கொடியேற்றினார்

    தூத்துக்குடியில் நேற்று நடந்த சுதந்திர தின விழாவில் கலெக்டர் சந்தீப் நந்தூரி தேசிய கொடியேற்றினார். மாணவ-மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. #IndependenceDay
    தூத்துக்குடி:

    நாடு முழுவதும் சுதந்திர தின விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் சுதந்திர தினவிழா நடந்தது. விழாவில் கலந்து கொள்ள மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி காலை 9.13 மணி அளவில் மாவட்ட விளையாட்டு அரங்க மைதானத்துக்கு வந்தார். அவரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா, மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன் ஆகியோர் வரவேற்றனர். தொடர்ந்து மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி 9.15 மணிக்கு தேசிய கொடியை ஏற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். திறந்த ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பை பார்வையிட்டார்.

    பின்னர் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். போலீஸ் துறையில் சிறப்பாக பணியாற்றிய கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பொன்ராமு, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சின்ராம், ஜெபராஜ், பிரகாஷ் உள்பட போலீசார் 36 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களும், பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு நற்சான்றிதழ்களும் வழங்கினார். தொடர்ந்து கலெக்டர் சந்தீப் நந்தூரி, புறாக்கள், பலூன்களை பறக்கவிட்டார்.

    விழாவில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் ரூ.2 லட்சத்து 35 ஆயிரத்து 160, கூட்டுறவுத்துறை மூலம் ரூ.8½ லட்சம், வேளாண்மைத்துறை மூலம் ரூ.4 லட்சத்து 41 ஆயிரத்து 250, தாட்கோ மூலம் ரூ.24 லட்சத்து 96 ஆயிரத்து 682, மாவட்ட தொழில் மையம் மூலம் ரூ.12 லட்சத்து 74 ஆயிரம், மகளிர் திட்டம் மூலம் ரூ.9 லட்சத்து 12 ஆயிரத்து 833 உள்பட மொத்தம் 10 துறைகள் மூலம் 59 பயனாளிகளுக்கு ரூ.64 லட்சத்து 72 ஆயிரத்து 750-க்கான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    விழாவில் எட்டயபுரம் மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, தூத்துக்குடி விக்டோரியா மகளிர் மேல்நிலைப்பள்ளி, தூத்துக்குடி நல்லாயன் செவித்திறன் குறைவுடையோர் பள்ளி, கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, தூத்துக்குடி காரப்பேட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருச்செந்தூர் காஞ்சி ஸ்ரீசங்கரா அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய 6 பள்ளிக்கூட மாணவ-மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

    விழாவில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ், உதவி கலெக்டர் பிரசாந்த், உதவி கலெக்டர் (பயிற்சி) அனு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தனபதி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தியாகராஜன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மனோகரன், கடலோர காவல்படை கமாண்டர் வெங்கடேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    Next Story
    ×