search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரள முதல்-மந்திரி கோரிக்கை ஏற்பு - முல்லைபெரியாறு அணையில் கூடுதல் தண்ணீர் திறப்பு
    X

    கேரள முதல்-மந்திரி கோரிக்கை ஏற்பு - முல்லைபெரியாறு அணையில் கூடுதல் தண்ணீர் திறப்பு

    கேரள முதல்-மந்திரியின் கோரிக்கையை ஏற்று பெரியாறு அணையில் இருந்து தமிழகத்துக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
    கூடலூர்:

    கேரளாவில் பெய்து வரும் கன மழை காரணமாக முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் 3-வது முறையாக நேற்று 142 அடியை எட்டியது. அணைக்கு தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்துள்ளதால் இன்று காலை அணையின் நீர் மட்டம் 142.20 அடியாக உள்ளது. வினாடிக்கு 25,733 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 2,336 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பப்டது. நீர் இருப்பு 7,720 மில்லியன் கன அடியாக உள்ளது.

    முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் 142 அடியை எட்டி தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து இருப்பதால் தமிழக பகுதிக்கு கூடுதல தண்ணீர் திறக்க வேண்டும் என கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் தமிழக அரசுக்கு இன்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும் அணையின நீர் மட்டத்தை 139 அடியிலேயே வைத்துக் கொள்ளவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். தற்போது பெரியாறு அணையில் இருந்து வெளியேறும் தண்ணீர் இடுக்கி அணையில் கலக்கிறது. இடுக்கி அணை ஏற்கனவே நிரம்பி 26 ஆண்டுகளுக்கு பிறகு அந்த அணையில் இருந்து 5 மதகுகள் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் இடுக்கி மாவட்டத்தின் பெரும் பாலான பகுதிகள் தண்ணீரில் மிதந்து வருகின்றன. தொடர்ந்து பெரியாறு அணையில் இருந்து வெளியேறும் தண்ணீரும் இடுக்கி அணைல் கலப்பதால் அம்மாவட்டத்துக்கு பாதிப்பு அதிகரிக்கும் என்பதை கருத்தில் கொண்டு இதனை பரிசீலனை செய்யுமாறு தமிழக அரசுக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது.

    முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு வைகை அணையில் தேக்கி வைக்க அதிகாரிகள் முயற்சி எடுத்து வருகின்றனர். 71 அடி உயரமுள்ள வைகை அணையில் தற்போது 63.75 அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு 3,666 கன அடி வீதம் தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து மதுரை மாநகர குடிநீருக்கு மட்டும் 60 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

    பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு வைகை அணை நீர் மட்டத்தை உயர்த்தினால் திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட பாசன பகுதிகள் பயன்பெறும். எனவே வைகை அணைக்கு கூடுதல் தண்ணீர் திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இதனால் வைகை அணையும் ஓரிரு நாளில் நிரம்பு என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று ஒரே நாளில் பெரியாறு அணையில் 12 செ.மீ மழையும் தேக்கடியில் 11 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. வைகை அணையின் நீர் பிடிப்பு பகுதியாக வரு‌ஷநாடு, மூல வைகை ஆறு ஆகிய பகுதிகளிலும் மழை பெய்து வருவதால் அணைக்கு தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்துள்ளது.

    Next Story
    ×