search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்டூர் 16 கண் பாலம் மதகு வழியாக வெளியேற்றப்பட்ட தண்ணீர் காவிரி ஆற்றில் சீறிப்பாயும் காட்சி.
    X
    மேட்டூர் 16 கண் பாலம் மதகு வழியாக வெளியேற்றப்பட்ட தண்ணீர் காவிரி ஆற்றில் சீறிப்பாயும் காட்சி.

    மேட்டூர் அணையில் இருந்து 1.70 லட்சம் கன அடி தண்ணீர் திறப்பு- 1000 வீடுகளில் வெள்ளம் புகுந்தது

    மேட்டூர் அணைக்கு இன்று காலை 1 லட்சத்து 70 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்த நிலையில் அந்த தண்ணீர் முழுவதும் காவிரி ஆற்றில் அப்படியே வெளியேற்றப்பட்டு வருவதால் நாமக்கலில் 1000 வீடுகளில் வெள்ளம் புகுந்தது. #MetturDam
    மேட்டூர்:

    கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பின.

    அந்த அணைகளுக்கு வரும் 1 லட்சத்து 75 ஆயிரம் கன அடி தண்ணீரும் அப்படியே காவிரி ஆற்றில் இன்றும் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீருடன் மழை நீரும் சேர்ந்து வருவதால் 2 லட்சம் கன அடிக்கும் அதிகமாக தண்ணீர் தமிழகம் நோக்கி வருவதால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இந்த தண்ணீர் ஒகேனக்கலை கடந்து நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. நேற்று காலை மேட்டூர் அணைக்கு 91 ஆயிரத்து 75 கன அடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து மாலையில் 1 லட்சத்து 60 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இந்த தண்ணீர் அப்படியே காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

    மேட்டூர் அணைக்கு இன்று காலை 1 லட்சத்து 70 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்த நிலையில் அந்த தண்ணீர் முழுவதும் காவிரி ஆற்றில் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் இன்று காலை 120.30 அடியாக இருந்தது.

    மேட்டூர் அணையில் இருந்து அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டதால் காவிரி கரையோர கிராமங்களுக்கு தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீரால் மேட்டூர்-எடப்பாடி சாலையில் 4 அடி உயரத்திற்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    மேட்டூரில் இருந்து சங்கிலி முனியப்பன் கோவில், பெறையூர், ரெட்டியூர், கோல்நாயக்கன்பட்டி, தெக்கத்திக்காடு, பூலாம்பட்டி, எடப்பாடி ஆகிய பகுதிகளுக்கு வாகன போக்குவரத்து தடைபட்டதால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினர். மேலும் அப்பகுதியில் உள்ள விவசாய நிலத்திற்குள்ளும் தண்ணீர் புகுந்ததால் வாழைகள் மூழ்கி உள்ளன. அந்த வழியாக நடந்தும் மோட்டார் சைக்கிளிலும் சென்றவர்களை வருவாய் துறையினர் எச்சரித்தனர்.

    மேட்டூர் பகுதியில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை கலெக்டர் ரோகிணி ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், சேலம் மாவட்டத்தில் காவிரி கரையோரங்களில் 16 கிராமங்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த 16 இடங்களில் நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளன.

    தங்கமாபுரி பட்டினம் பகுதியில் 10 வீடுகளில் வெள்ளம் சூழ்ந்ததையடுத்து இங்கு வசிப்பவர்கள் அருகில் உள்ள பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். எடப்பாடி செல்லும் பஸ்கள் மாற்று பாதையில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதால் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளது. அணை முழு பாதுகாப்புடன் உள்ளது. மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.

    நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கும். மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு குறித்து ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை டெல்டா மாவட்ட கலெக்டர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு வருகிறது என்றார்.

    மேட்டூர் அணைக்கு கடந்த 2005-ம் ஆண்டு 2.41 லட்சம் கன அடி தண்ணீர் வந்தது. அதன் பிறகு 2013-ம் ஆண்டு 1.61 லட்சம் கன அடி தண்ணீர் வந்த நிலையில் தற்போது மீண்டும் 1.70 லட்சம் கன அடி தண்ணீர் வருவது குறிப்பிடத்தக்கது.



    மேட்டூர் அணையிலிருந்து அதிகளவு தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளில் காவிரி கரையோரம் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்தது. குமாரபாளையம் கலைமகள் தெரு இந்திரா நகர், மணிமேகலை தெரு, இந்திரா நகர் ஆகிய பகுதிகளில் உள்ள 40-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

    இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஜே.கே.கே.நடராஜா நகராட்சி மண்டபத்திலும், புத்தர் வீதி அரசு நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களிலும் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். மேலும் காவிரி கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் குமாரபாளையத்தையும், பவானியையும் இணைக்கும் பழைய பாலத்தில் பாதுகாப்பு கருதி போக்குவரத்து உடனடியாக நிறுத்தப்பட்டது. இதனால் இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது.

    பள்ளிபாளையத்தில் காவிரி கரையோரம் உள்ள ஜனதாநகர், சத்யா நகர், பாவடி தெரு, நாட்டாகவுண்டன்புதூர், கந்தப்பேட்டை, அக்ரகாரம் உள்பட காவிரி கரையோரம் உள்ள 1000-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்தது. நள்ளிரவு 12 மணிக்கு வீடுகளுக்குள் தண்ணீர் மள, மளவென புகுந்ததால் அந்த பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுபற்றி அறிந்ததும் போலீசாரும், வருவாய்துறை அதிகாரிகளும் அங்கு விரைந்து சென்று அந்த பகுதியில் வசித்து வந்த பொதுமக்களை மீட்டு பள்ளிபாளையத்தில் உள்ள சமுதாய கூடம் மற்றும் திருமண மண்டபத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு உள்ளனர். தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்து வருவதால் பொதுமக்கள் ஆற்றில் இறங்கி குளிக்கவோ, ஆற்றங்கரையோரம் செல்லவோ கூடாதென எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. பள்ளிபாளையம் மற்றும் குமாரபாளையம் பகுதிகளில் பேரிடர் மீட்பு குழுவினர் தயாராக வைக்கப்பட்டுள்ளனர்.

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் காவிரி ஆற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. காவிரி கரையோரம் உள்ள காசிவிஸ்வநாதர் கோவிலை தொட்டபடி தண்ணீர் பெருக்கெடுத்து செல்கிறது.

    ஒகேனக்கல்லுக்கு நேற்று காலையில் 1 லட்சத்து 20 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து மாலையில் 1 லட்சத்து 90 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இன்று காலை 7 மணிக்கு 2 லட்சத்து 10 ஆயிரம் கன அடி தண்ணீர் ஓகேனக்கலில் வந்து கொண்டிருக்கிறது.


    நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல் சத்திரம் பகுதியில் உள்ள 10 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. அந்த வீடுகளில் வசித்தவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஊட்டமலையில் இருந்து ஒகேனக்கல் வரை காவிரி கரையோர பகுதியில் வசித்த மக்கள் ஒகேனக்கல்லில் உள்ள பெரியார் பில்டிங்கில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். நேற்று மாலை முதல் அங்கு தங்கி உள்ள 55 பேருக்கு வருவாய் துறை சார்பில் உணவு வழங்கப்பட்டு வருகிறது.

    நீர்வரத்து 2 லட்சத்து 10 ஆயிரம் கனஅடியாக உயர்ந்து இருப்பதால் ஒகேனக்கல் ஐந்தருவி இருப்பதே தெரியாத அளவிற்கு தண்ணீர் செல்கிறது. மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதைக்கு மேல் தண்ணீர் அதிக அளவில் செல்கிறது. மெயின் அருவி, சினிபால்ஸ் அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதைக் காண இன்றும் சுற்றுலா பயணிகள் கார், வேன், பஸ்களில் ஒகேனக்கல்லுக்கு வந்தனர். அவர்களை வனத்துறையினர் மற்றும் போலீசார் மடம் சோதனைச்சாவடி மற்றும் கண்ணாடி குண்டு ஆகிய பகுதிகளில் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினார்கள்.

    ஒகேனக்கல் காவிரி கரையோர பகுதிகளில் தீயணைப்புத்துறையினர், ஊர்காவல் படையினர் மற்றும் வருவாய்த் துறையினர் தொடர்ந்து முகாமிட்டு உள்ளனர்.

    5 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 2 லட்சத்து 10 ஆயிரம் கன அடியாக அதிகரித்து உள்ளது. 2005-ம் ஆண்டு வினாடிக்கு 2 லட்சத்து 40 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. கடந்த 1961-ம் ஆண்டு ஒகேனக்கல்லுக்கு 3 லட்சம் கன அடி தண்ணீர் வந்தது தான் அதிகபட்ச அளவாக உள்ளது. #MetturDam #Hogenakkal
    Next Story
    ×