search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கலெக்டர் அலுவலகத்தில் காலி குடங்களுடன் பெண்கள் போராட்டம்
    X

    கலெக்டர் அலுவலகத்தில் காலி குடங்களுடன் பெண்கள் போராட்டம்

    3 ஆண்டுகளாக குடிநீர் கிடைக்க வில்லை என்று கலெக்டர் அலுவலகத்தில் காலி குடங்களுடன் பெண்கள் போராட்டம் நடத்தினர்.
    மதுரை:

    உசிலம்பட்டி தாலுகா வேப்பனைத்து பஞ்சாயத்துக்கு உட்பட்ட வி.பேயம்பட்டி கிராமத்தை சேர்ந்த பெண்கள் ஏராளமானோர் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு காலிகுடங்களுடன் வந்தனர். அவர்கள் குடிநீர் வேண்டும் என்று கோஷமிட்டபடி கலெக்டர் அலுவலக வளாகத்தில் போராட்டம் நடத்தினர்.

    பின்னர் அவர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    எங்கள் கிராமத்தில் கடந்த 3 ஆண்டுகளாக குடிநீர் சரியாக வருவதில்லை. இதனால் குடிநீருக்கு பல கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டி உள்ளது. குடிநீர் மட்டுமின்றி சாலை, மயானம், மின் விளக்கு போன்ற எந்த அடிப்படை வசதிகளும் கிடைக்கவில்லை. அங்குள்ள அதிகாரிகளிடம் முறையிட்டும் பயன் இல்லை. எனவே கலெக்டர் உரிய நடவடிக்கை எடுத்து குடிநீர் உள்பட அடிப்படை வசதிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மதுரை சக்கிமங்கலம் பகுதியை சேர்ந்த ஜமால் மொய்தீன் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், “எங்கள் பகுதியில் அரசால் வழங்கப்படும் இலவச வீட்டு மனையை, ஏழைகளுக்கு வழங்காமல் நில புரோக்கர்களுக்கு அதிகாரிகள் வழங்கி வருகின்றனர். அனைத்து சமுதாய மக்களும் பயன்படும்படி, தகுதியானவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும்“ என்று அதில் கூறப்பட்டு இருந்தது.

    கணேஷ்பாபு என்ற மாற்றுத்திறனாளி கலெக்டரிடம் கொடுத்த மனுவில், “மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் மற்றும் விதவைகளுக்கு தமிழக அரசால் மாதந்தோறும் ஓய்வூதிய தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகையை, வங்கியின் மூலம் பயனாளிகளுக்கு நேரடியாக வழங்க வேண்டும். ஆனால் அவர்கள் உரிய முறையில் பணத்தை வழங்குவதில்லை. இதனால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றோம். எனவே எங்களுக்கு ஏ.டி.எம். அட்டை வழங்கி, அதன் மூலம் பணம் எடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

    மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா கீழையூர் கிராம மக்கள் சார்பாக பாண்டிவேல் என்பவர் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், “மேலூரில் உள்ள விவசாயிகள் ஒரு போக சாகுபடியை நம்பி உள்ளனர். தற்போது முல்லைப்பெரியாறு அணையில் போதிய அளவு தண்ணீர் இருப்பதால், பெரியாறு கால்வாயில் தண்ணீர் திறந்து விட வேண்டும்“ என்று கூறியிருந்தார். 
    Next Story
    ×