search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 89 ஆயிரம் கன அடியாக குறைந்தது
    X

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 89 ஆயிரம் கன அடியாக குறைந்தது

    மேட்டூர் அணைக்கு இன்று காலை நீர்வரத்து மேலும் சரிந்து 89 ஆயிரத்து 15 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மேட்டூர் அணையின் நீர் மட்டம் இன்று காலை 120.31 அடியாக இருந்தது. #MetturDam
    மேட்டூர்:

    கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மீண்டும் கன மழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ண ராஜசாகர் அணைகள் நிரம்பி உள்ளன.

    கிருஷ்ணராஜசாகர் அணைக்கு இன்று காலை நீர்வரத்து 57 ஆயிரத்து 464 கன அடியாகவும், கபினி அணைக்கு நீர்வரத்து 40 ஆயிரம் கன அடியாகவும் இருந்தது.

    கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து நேற்று 1 லட்சத்து 40 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்ட நிலையில் இன்று 2 அணைகளில் இருந்தும் 1 லட்சத்து 20 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த அணைகளில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள உபரிநீர் கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.

    நேற்று காலை மேட்டூர் அணைக்கு ஒரு லட்சத்து 14 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இன்று நீர்வரத்து மேலும் சரிந்து 89 ஆயிரத்து 15 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மேட்டூர் அணையின் நீர் மட்டம் இன்று காலை 120.31 அடியாக இருந்தது.

    அணையில் இருந்து 88 ஆயிரத்து 518 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் அதிகாரிகள் 24 மணி நேரமும் காவிரி கரையோர பகுதிகளில் கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர். வெள்ளம் சூழ்ந்த மேட்டூர் தங்கமாபுரி பட்டணம், நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதிகளில் வசித்து வந்தவர்கள் திருமண மண்டபங்களில் தொடர்ந்து தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    ஒகேனக்கல்லில் நேற்று காலை ஒரு லட்சத்து 19 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்த நிலையில் இன்று தண்ணீர் வரத்து 80ஆயிரம் கன அடியாக குறைந்தது. ஒகேனக்கல்லில் அனைத்து அருவிகள், நடை பாதையும் தண்ணீரில் மூழ்கி உள்ளது. இதனால் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    ஒகேனக்கல் காவிரியில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தை பொதுமக்கள் காவிரி கரையோரம் நின்று வேடிக்கை பார்த்து வருகிறார்கள். #MetturDam
    Next Story
    ×