search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பட்டுக்கோட்டை அருகே ரவுடியை அடித்து கொன்ற பொதுமக்கள்
    X

    பட்டுக்கோட்டை அருகே ரவுடியை அடித்து கொன்ற பொதுமக்கள்

    பட்டுக்கோட்டை அருகே இரவில் தகராறு செய்த ரவுடியை பொதுமக்களே உருட்டுக் கட்டையால் அடித்து கொன்றனர். #murder

    பட்டுக்கோட்டை:

    பட்டுக்கோட்டை அருகே இரவில் தகராறு செய்த ரவுடியை பொதுமக்களே உருட்டுக் கட்டையால் அடித்து கொன்றனர்.

    பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

    தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை சாந்தாங்காடு வெட்டிகாடு பகுதியை சேர்ந்தவர் ராஜசேகரன். இவரது மகன் தம்பா கார்த்தி (வயது 24). ரவுடி. இவர் மீது போலீஸ் நிலையத்தில் வழக்குகள் உள்ளன.

    இந்த நிலையில் நேற்று இரவு தம்பா கார்த்தி மற்றும் அவரது நண்பர் டேனியல் (20) ஆகியோர் எம்.என் தோட்டம் அருகே நரியம்பாளையம் பகுதியில் நின்று கொண்டு ஒரு வீட்டில் தகராறு செய்துள்ளனர்.

    அப்போது சத்தம் கேட்டு வந்த எதிர் வீட்டை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் என்ன தகராறு? என கேட்டுள்ளார். அதற்கு தம்பா கார்த்தி மற்றும் டேனியல் ஆகியோர் ராமச்சந்திரனிடம் வாக்குவாதம் செய்தனர். ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த இருவரும் ‘ஆட்களை கூட்டி வருவதாக கூறிவிட்டு புறப்பட்டு சென்றனர்.

    பின்னர் சிறிது நேரம் கழித்து தம்பா கார்த்தி, டேனியல் ஆகியோர் ஆட்களை அழைத்து வந்தனர். அப்போது ராமச்சந்திரன் வீட்டுக்கு சென்று மீண்டும் தகராறு செய்து சண்டை போட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ராமச்சந்திரன் சத்தம் போட்டுள்ளார். இந்த சத்தத்தை கேட்டு அப்பகுதியை சேர்ந்த பொது மக்கள் திரண்டு வந்தனர்.

    தகராறு செய்த தம்பா கார்த்தியையும், டேனியலையும் அவர்கள் தட்டி கேட்டனர். ஆனால் இதை பொருட்படுத்தாமல் தம்பா கார்த்தி, டேனியல் ஆகியோர் தொடர்ந்து சத்தம் போட்டு கொண்டே இருந்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், திடீரென ஆவேசத்துடன் கையில் கிடைத்த கம்பு கட்டைகளை கொண்டு 2 பேரையும் தாக்கினர். இதில் தம்பா கார்த்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். வாலிபர் டேனியல் பலத்த காயம் அடைந்தார்.

    உடனே அருகில் நின்றவர்கள் உயிருக்கு போராடிய டேனியலை தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    தகராறு செய்த ரவுடியை பொதுமக்களே அடித்து கொன்ற சம்பவம் பட்டுக்கோட்டை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    கொலையுண்ட தம்பா கார்த்தி வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் அப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து அந்த பகுதியில் ரோந்து சுற்றி கண்காணித்து வருகின்றனர்.

    Next Story
    ×