search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரெயில்வே பெண் ஊழியரிடம் நகை பறிக்க முயன்ற கொள்ளையன்
    X

    ரெயில்வே பெண் ஊழியரிடம் நகை பறிக்க முயன்ற கொள்ளையன்

    ஈரோட்டில் நடந்து சென்ற ரெயில்வே பெண் ஊழியரிடம், கொள்ளையன் நகையை பறிக்க முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ஈரோடு:

    நீலகிரியை சேர்ந்தவர் பழனி. இவரது மகள் அமிர் தவல்லி (வயது 26). சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள மாவேலி பாளையம் ரெயில் நிலையத்தில் ஸ்டேசன் போர்ட்டராக பணி புரிந்து வருகிறார்.

    இந்த நிலையில் சொந்த வேலையாக அமிர்தவல்லி ஈரோடு வந்திருந்தார்.

    பிறகு அவர் இரவில் ஈரோடு ரெயில்வே காலனி பார்சல் ரோடு வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது இருட்டு பகுதியில் மறைந்திருந்த ஒரு மர்ம ஆசாமி திடீரென வந்து அமிர்தவல்லியை மறித்தான். பிறகு அவரை மிரட்டி கழுத்தில் கிடந்த நகையை பறிக்க முயன்றான்.

    ஆனால் நகையை பறிக்க விடாமல் அவர் கொள்ளையனுடன் போராடினார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த கொள்ளையன் அமிர்த வல்லியை தாக்கினான். முகத்தில் கையால் குத்தினான்.

    இதில் நிலை குலைந்த அவர் கீழே விழுந்தார். எனினும் நகையை பறிக்க விடாமல் நகையை கையால் இருக்கி பிடித்து கொண்டார். மேலும் திருடன்... திருடன்.. என கூச்சலிட்டார். அவரது சத்தத்தை கேட்டதும் அங்கு சிலர் ஓடி வந்தனர். அவர்களிடம் சிக்கி கொள்ளாமல் அந்த கொள்ளையன் தப்பி ஓடி விட்டான்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த துணிகர சம்பவம் பற்றி சூரம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×