search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1 லட்சத்து 14 ஆயிரம் கன அடியாக குறைந்தது
    X

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1 லட்சத்து 14 ஆயிரம் கன அடியாக குறைந்தது

    கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு குறைந்ததால் மேட்டூர் அணைக்கு இன்று காலை நீர்வரத்து 1 லட்சத்து 14 ஆயிரம் கன அடியாக குறைந்தது. #MetturDam
    மேட்டூர்:

    கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழையால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணசாகர் அணைகள் நிரம்பின.

    இந்த 2 அணைகளில் இருந்தும் நேற்று காலை 1 லட்சத்து 40 ஆயிரம் கன அடி உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் ஒகேனக்கலை கடந்து நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது.

    இதனால் மேட்டூர் அணைக்கு நேற்று காலை 1 லட்சத்து 33 ஆயிரத்து 941 கன அடி தண்ணீர் வந்ததால் அணையில் இருந்து 1 லட்சத்து 35 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

    இதற்கிடையே கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து குறைந்ததால் நேற்று மாலை முதல் தண்ணீர் திறப்பு படிப்படியாக குறைக்கப்பட்டது. கிருஷ்ணராஜசாகர் அணைக்கு இன்று காலை 27 ஆயிரத்து 528 கன அடி தண்ணீர் வந்த நிலையில் அணையில் இருந்து 26 ஆயிரத்து 425 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

    கபினி அணைக்கு நீர்வரத்து 45 ஆயிரத்து 750 கன அடியாக இருந்ததால் அணையில் இருந்து 40 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது. தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டதால் இனி வரும் நாட்களில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைய வாய்ப்புள்ளது.


    மேட்டூர் அணைக்கு இன்று காலை நீர்வரத்து 1 லட்சத்து 14 ஆயிரம் கன அடியாக இருந்தது. 16 கண் பாலம் வழியாக 89 ஆயிரம் கன அடியும், நீர் மின் நிலையம் வழியாக 23 ஆயிரம் கன அடி என மொத்தம் 1 லட்சத்து 12 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    அணையின் நீர்மட்டம் இன்று காலை 120.30 அடியாக இருந்தது. மேட்டூர் அணையில் இருந்து 1 லட்சம் கன அடிக்கும் அதிகமாக தண்ணீர் திறந்து விடப்படுவதால் மேட்டூர் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. விடுமுறைநாளான நேற்று ஏராளமான பொது மக்கள் திரண்டு காவிரி ஓடும் வெள்ளத்தை வேடிக்கை பார்த்தனர்.

    நாமக்கல் மாவட்டம் காவிரி கரையோர பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்தது. இந்த வீடுகளில் வசித்தவர்கள் தொடர்ந்து பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் காவிரி கரையோர பகுதிகளில் வருவாய் துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று காலை 1 லட்சத்து 22 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்த நிலையில் இன்று காலை 1 லட்சத்து 19 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அனைத்து அருவிகளையும் மூழ்கடித்த படி வெள்ளம் செல்கிறது. அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் கரையில் நின்று வேடிக்கை பார்த்து செல்கிறார்கள். #MetturDam
    Next Story
    ×