search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுக்கோட்டை மீனவர்கள் 27 பேர் சிறைபிடிப்பு- இலங்கை கடற்படை நடவடிக்கை
    X

    புதுக்கோட்டை மீனவர்கள் 27 பேர் சிறைபிடிப்பு- இலங்கை கடற்படை நடவடிக்கை

    எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி புதுக்கோட்டை மீனவர்கள் 27 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த மீனவர்கள், ஏம்பவயல்  நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். நேற்று அவர்கள் இந்திய கடல் எல்லையான நெடுந்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த போது அங்கு, சிறிய ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை அங்கிருந்து செல்லுமாறு எச்சரித்தனர்.

    மேலும் மீனவர்களின் படகுகளில் ஏறிய கடற்படை வீரர்கள் மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தி, மீனவர்களை தாக்கியதாகவும்  தெரிகிறது. இதனால் உயிருக்கு பயந்து மீனவர்கள் அங்கிருந்து புறப்பட்டனர். ஆனாலும் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி புதுக்கோட்டை ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த 27 மீனவர்களை சிறை பிடித்தனர். அவர்களது 4 நாட்டுப்படகுகளையும் பறிமுதல்  செய்தனர்.

    சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை படகுகளுடன் இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இன்று காலை  ஊர்க்காவல் துறை நீதி மன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். சிறைபிடிக்கப்பட்ட புதுக்கோட்டை   மீனவர்களின் பெயர்  விவரம் வருமாறு:-

    வேலாயுதம், பாலா, செங்கமுத்து, விக்கி, முத்துக்காளி,  ராஜு, பாலா, கிருஷ்ணன், லோகமுத்து, முத்துமாரி, அபுதாகீர், ராக்கு, பவித்ரன், குமரன், சந்தனமாரி, பஞ்ச நாதன், ராஜாராம், காளிதாஸ், கருப்பையா, ராமு, கணே சன், நந்தகுமார், ரமேஷ், பரமசிவம், செந்தூர் பாண்டியன் உள்பட 27 பேர்.

    சிறைபிடிக்கப்பட்ட  மீனவர்கள் மீது இலங்கை அரசின் புதிய சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளதாக தெரிகிறது. இந்த சட்டத்தின் மூலம் மீனவர்களுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 50 ஆயிரம் அபராதமும் விதிக்க வழிவகை உள்ளது குறிப்பிடத்தக்கது. மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டதை அறிந்த அவர்களது குடும்பத்தினர் மற்றும் புதுக்கோட்டை ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். 
    Next Story
    ×