search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மானசரோவரில் சிக்கி தவித்த தமிழக பக்தர்கள் பத்திரமாக ஊர் திரும்பினர்
    X

    மானசரோவரில் சிக்கி தவித்த தமிழக பக்தர்கள் பத்திரமாக ஊர் திரும்பினர்

    கைலாய மலை மானசரோவரில் சிக்கி தவித்த தமிழக பக்தர்கள் அனைவரும் விமானம் மூலமாக இன்று காலை பத்திரமாக கோவைக்கு வந்து சேர்ந்தனர்.
    கோவை:

    சீனா-நேபாள எல்லையில் கைலாய மலையில் மானசரோவர் ஏரி அமைந்துள்ளது. அங்கு உள்ள சிகரத்தை பக்தர்கள் கைலாயநாதராக நினைத்து வழிபட்டு வருகிறார்கள்.

    கைலாயநாதரரை வழிபடுவதற்காக கடந்த ஏப்ரல், ஜூன் மாதத்தில் கோவை, திருப்பூர், சேலம், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மானசரோவருக்கு புனித யாத்திரை சென்றனர். பின்னர் கைலாயநாதரை தரிசனம் செய்து விட்டு திரும்பினர்.

    அப்போது நேபாள நாட்டில் மலைப்பகுதியில் மோசமான வானிலை நிலவியது. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு சாலைகள் துண்டிக்கப்பட்டது. எனவே பக்தர்கள் ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்தனர்.

    எனவே சிமிகோட் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தங்கினர். தொடர்ந்து ஏற்பட்டு வந்த மோசமான வானிலை, பனிப்பொழிவு காரணமாக வெளியே வர முடியாமல் 6 நாட்கள் வீட்டுக்குள்ளேயே சிக்கி தவித்தனர். பின்னர் இயல்புநிலை திரும்பிய போது அனைவரும் விமானம் மூலமாக டெல்லிக்கு வந்தனர்.

    அங்கு இருந்து விமானம் மூலமாக இன்று காலை அனைவரும் கோவைக்கு வந்து சேர்ந்தனர். அவர்களை உறவினர்கள் கட்டி தழுவி வரவேற்றனர்.

    இதுகுறித்து திருச்செங்கோட்டை சேர்ந்த வித்யா விகாஷ் பள்ளி தலைவர் குணசேகரன் கூறியதாவது:-

    நாங்கள் கடந்த 23-ந் தேதி ஞானாலயா வள்ளலார் கோட்டத்தின் சார்பில் கைலாய மலைக்கு ஆன்மிக சுற்றுலாவுக்கு புறப்பட்டோம். ஆன்மிக பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பிய போது நேபாள நாட்டில் மோசமான வானிலை நிலவியது. கடுமையான மேக மூட்டம், பனிப்பொழிவு ஏற்பட்டது. எனவே சிமிகோட்டில் உள்ள ஒரு வீட்டில் நாங்கள் தங்கினோம்.

    மோசமான வானிலை காரணமாக 6 நாட்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டது. நல்ல வேலையாக எங்களுக்கு தேவையான உணவு அங்கு கிடைத்தது. பின்னர் திடீரென லேசான வெயில் அடிக்க தொடங்கியது. இதனை பயன்படுத்தி அங்கு வந்த விமானம் மூலமாக அனைவரும் பாதுகாப்பாக காட்மெண்டுக்கு வந்தோம். அங்கு இருந்து டெல்லிக்கு வந்து இன்று கோவைக்கு திரும்பினோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×