search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கருணாநிதி மறைவுக்கு அதிமுக சார்பில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் இரங்கல் செய்தி
    X

    கருணாநிதி மறைவுக்கு அதிமுக சார்பில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் இரங்கல் செய்தி

    திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு அதிமுக சார்பில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் கூட்டாக இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர். #RIPKalaignar
    காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணிக்கு காலமானார். கருணாநிதி மறைவுக்கு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் உள்பட பல முன்னணி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றன.

    இந்நிலையில் அதிமுக சார்பில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் கூட்டாக இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர். அதில் ‘‘தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், இந்திய நாட்டின் முதுபெரும் அரசியல் தலைவரும், தமிழறிஞருமான கலைஞர் கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தம் கொள்கிறோம்.

    தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். போன்ற திராவிட இயக்கத் தலைவர்களோடும், ஏனைய திராவிட இயக்க முன்னோடிகளோடும் தோளோடு தோள் நின்று 70 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி அரசியலிலும், சமூகப் பணிகளிலும் தனக்கென ஒரு தனி இடத்தைப் பெற்ற பெருமைக்குரியவர் கலைஞர் கருணாநிதி.

    திருக்குவளை என்னும் எளிய சிற்றூரில் பிறந்த ஏராளமான இடர்பாடுகளையும், சவால்களையும் தாண்டி, உழைப்பாலும், திறமையாலும் தன்னை உலகமறிந்த கலைஞராகவும், தலைவராகவும் உயர்த்திக் கொண்ட தனிப்பெரும் சிறப்பு கொண்டவர் கலைஞர் என்பதை எல்லோரும் ஏற்று பாராட்டுவர்.

    அரை நூற்றாண்டு காலம் தன்னை வழிநடத்திய சிறப்புமிக்க தலைவரை திமுக இழந்திருக்கிறது. பெருமைக்குரிய தலைவரை கலைஞரின் குடும்பம் இழந்திருக்கிறது. இந்த இழப்பினை தாங்கிக் கொள்ளும் மன உறுதியை அவரது குடும்பத்தினரும், இயக்கத்தினரும் பெற இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

    கலைஞர் கருணாநிதியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவர்பால் அன்பு கொண்ட அனைவருக்கும் அதிமுக சார்பில் ஆழந்த இரங்கலையும், உள்ளார்ந்த வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்’’ என்று தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×